எந்நேரமும் மக்களைப் பற்றியே சிந்தனை.. 'மனிதருள் புனிதர்'.. பிரதமர் மோடிக்கு அண்ணாமலை வாழ்த்து!
சென்னை : நாட்டையும் நாட்டின் மக்களையும் குறித்து மட்டுமே சிந்திக்கும் ஒரு மாமனிதரை, மனிதருள் புனிதரை நாம் பெற்றிருப்பது பெரும் பேறு எனக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
மக்கள் நலனை மேம்படுத்தவும் தீவிரமாகப் பாடுபடுவதால் நரேந்திர மோடி அவர்கள் மாற்றில்லா மாணிக்கமாக மதிப்பிற்குரிய மக்களின் தலைவராக ஒளி வீசுகிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடியில் 74வது பிறந்த நாளான இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு :
ப்ரேக்கிங் நியுஸ்! எம்பி தேர்தலில் மதுரையில் களமிறங்கும் பிரதமர் மோடி? பரபரப்பை கிளப்பிய போஸ்டர்கள்!
மனிதருள் புனிதர்
நாட்டையும் நாட்டின் மக்களையும் குறித்து மட்டுமே சிந்திக்கும் ஒரு மாமனிதரை, மனிதருள் புனிதரை நாம் பெற்றிருப்பது பெரும் பேறு. பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளில் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து மக்கள் தொண்டாற்ற நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் உள்ளன்போடு விரும்பப்படும் ஒரு அற்புத மனிதராக திகழ்பவர் மாண்புமிகு நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி.
பிரமிக்க வைக்கிறார்
தன்னலம் கருதாமல் பொது நலம் கருதி, நாட்டை உறுதியாக கட்டமைக்கும் தொலைநோக்கு பார்வையுடன், எந்தவிதமான சர்ச்சைக்கும் இடம் தராமல், மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் இவரின் வேகமான செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. பாரதப் பிரதமர் மோடி அவர்களின் வெளிநாட்டுக் கொள்கை முயற்சிகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உண்மையான திறமை மற்றும் பங்களிப்பை உலகறியச் செய்தன.
பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப
பாரதிதாசனாரின் கனவினில் விரிந்த.... தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனில் அன்றோ இன்பம் தங்கும்... என்ற பாவேந்தரின் வரிகளுக்கு கண் திறப்பு செய்ய, வாராது வந்த மாமணியாய் பரந்த மனமும் விரிந்த பண்பும் கொண்ட, மாமனிதர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
மாற்றில்லா மாணிக்கம்
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கமாக அறிந்து கொண்டும், அதனை தீர்க்கும் வழி முறைகளைத் தெளிவாகத் திட்டமிட்டும், மக்கள் நலனை மேம்படுத்தவும் தீவிரமாகப் பாடுபடுவதால் நரேந்திர மோடி மாற்றில்லா மாணிக்கமாக மதிப்பிற்குரிய மக்களின் தலைவராக' ஒளி வீசுகிறார். நம் பாரதப் பிரதமருக்குத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனம்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் அண்ணாமலை.