எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய முடியாது.. ஆளுநருக்கு அதிகாரமே இல்லையா? இந்தியாவை அதிர வைத்த வழக்குகள்!
சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்னும் ஆட்சியை அமைக்க முடியாத சூழலில் உள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால், ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இதுவரை அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
இதனால் அரசியல் மட்டுமின்றி, சட்ட ரீதியிலான விவாதங்களும் தற்போது உச்சத்தை எட்டியுள்ளன. இந்த விவகாரத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல முக்கிய அம்சங்களும்,பல மாநிலங்களில் அரசியல் கட்சியினரின் உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களும் மீண்டும் நினைவு கூரப்படுகின்றன.

குறிப்பாக, "ஒரு கட்சிக்கு உண்மையில் பெரும்பான்மை உள்ளதா என்பதை தீர்மானிப்பது ஆளுநரின் தனிப்பட்ட கணிப்பு அல்ல; சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பே அதற்கான இறுதி சோதனை" என்ற உச்ச நீதிமன்றத்தின் எஸ்.ஆர்.பொம்மை வழக்குத் தீர்ப்பு மீண்டும் விவாதிக்கப்படுகிறது.
எஸ் ஆர் பொம்மை வழக்கு
1994-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பில், ஒரு அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை ராஜ்பவன் அல்லது ஆளுநர் மாளிகையில் முடிவு செய்ய முடியாது என்றும், அது சட்டப்பேரவையிலேயே நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த தீர்ப்பிற்குப் பிறகே இந்திய அரசியலில் "ப்ளோர் டெஸ்ட்" எனப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியலமைப்புச் செயல்முறையாக நிலைநிறுத்தப்பட்டது.
தொங்கு சட்டசபை
அதன்பிறகு கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொங்கு சட்டசபை நிலை ஏற்பட்டபோது, உச்ச நீதிமன்றம் அதே எஸ்.ஆர்.பொம்மை தீர்ப்பை அடிப்படையாக கொண்டு உடனடி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டது. 2018-ஆம் ஆண்டு கர்நாடகாவில் பாஜக 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்கள் இல்லாத நிலையிலும், ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ்
இதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் உச்ச நீதிமன்றத்தை அணுகின. இறுதியில் நீதிமன்றம் விரைவான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் எடியூரப்பா பதவி விலக நேரிட்டது. அதேபோல், 2017-ஆம் ஆண்டு கோவாவில் காங்கிரஸ் 17 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், பாஜக வேகமாக கூட்டணியை அமைத்து பெரும்பான்மையை திரட்டியது. இதையடுத்து ஆளுநர் மனோகர் பாரிக்கரை முதல்வராக அழைத்தார்.
தேவேந்திர பட்நாவிஸ்
இதையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டபோது, "சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும்" என்றே உச்ச நீதிமன்றம் கூறியது. 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் திடீரென முதல்வராக பதவியேற்ற சம்பவமும் இதேபோன்ற சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பாஜக அரசு கவிழ்ந்தது. பின்னர் சிவசேனா - காங்கிரஸ் - என்சிபி கூட்டணி ஆட்சியை அமைத்தது.
தனிப்பெரும் கட்சி
இந்த முன் உதாரணங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, தமிழகத்தில் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது குறித்து பல்வேறு சட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். "தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை முதலில் அழைத்து, பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்பதே ஒரு தரப்பின் வாதமாக உள்ளது.
ஆளுநரின் அதிகாரம்
மற்றொரு தரப்பு, "118 உறுப்பினர்களின் ஆதரவு உறுதியாக இல்லாமல் ஆட்சியமைக்க அழைப்பது அரசியல் நிலைதடுமாற்றத்தை உருவாக்கும்" என ஆளுநரின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது. குறிப்பாக நபாம் ரேபியா வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியபடி, முதல்வரை நியமிக்கும் போது ஆளுநருக்கு ஒரு அளவுக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் இருப்பதாகவும் வாதிடப்படுகிறது.
முக்கிய திருப்புமுனை
இதற்கிடையில், தவெக தரப்பில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மறுபுறம், திமுக - அதிமுக இடையே மறைமுக அரசியல் நகர்வுகள் நடக்கிறதா என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசியல் தற்போது ஒரு முக்கிய திருப்புமுனையில் நகராமல் நிற்கிறது. இறுதியில் விஜய் வெல்வாரா? ஆளுநர் வெல்வாரா? என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications