கூட்டணி ஆட்சிதான்.. 3 முறை அமித்ஷாவே சொல்லிவிட்டார்.. மாற்ற முடியாது.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி
சென்னை: கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம் என்று பாஜக அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இது தொடர்பாக பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றாலே அனைவருக்கும் தெரியும் 2014, 2019 இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அப்போதும் கூட கூட்டணி கட்சிகளை எல்லாம் இணைத்தே அமைச்சரவையை அமைத்தார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றால் அது கூட்டணி அமைச்சரவை தான் என்பது எனது புரிதல்.

முதல்வர் வேட்பாளர் யார் என்று கூட்டணியினர் சேர்ந்து முடிவெடுப்பார்கள். 2026 இல் கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பதில்
இந்த நிலையில்தான் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், என் கட்சித் தலைவர் அமித்ஷா 'கூட்டணி ஆட்சி' என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம்.
கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்துவிட்டார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு தொண்டனாக அதை ஏற்றுக்கொள்வேன், என்று கூறி உள்ளார்.
எடப்பாடி பதிலடி
முன்னதாக தினகரனின் இந்த பேச்சு தொடர்பான கேள்விக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், அமித் ஷா சென்னைக்கு வந்த போதே இதை பற்றி தெளிவாக சொல்லிவிட்டார். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அதோடு இதற்கு நாங்கள்தான் தலைமை தங்குவோம் என்பதும் உறுதியாகிவிட்டது.
அதோடு இல்லாமல் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமிதான் இருப்பார் துன்று அமித் ஷாவே அறிவித்துவிட்ட்டார். எங்கள் கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
அதாவது முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் இறுதி முடிவு வந்து டெல்லி எடுக்கிற முடிவுதான்.. அது உங்களுக்கே தெரியும். உங்கள் எல்லோருக்குமே தெரியும்.. டெல்லி இதில் எடுக்கும் முடிவுதான் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியபடிதான்.. அதை தாண்டி யார் பேசினாலும் அது சரியில்லை.. அமைச்சர் பேச்சை தாண்டி யார் என்ன சொன்னாலும் அது சரி கிடையாது என்பதுதான் என் கருத்து, என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
அமித் ஷா சொன்னது என்ன?
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாகடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது. ஊழலை மறைக்க மும்மொழிக் கொள்கை விவகாரத்தை எழுப்பி திமுக திசை திருப்புகிறது; வரும் தேர்தலில் திமுக ஊழல், பட்டியலின மக்கள், மகளிர் வன்கொடுமை போன்றவை எதிரொலிக்கும். தமிழ்நாட்டில் ரூ.39,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.
நாங்கள் இணைந்துதான் ஆட்சியமைக்கப் போகிறோம்; கூட்டணி ஆட்சிதான் நடக்கும் தீ எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி அமைகிறது; வெற்றிக்குப் பிறகு மற்றவை முடிவு செய்யப்படும். ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்சனைகளை திசை திருப்ப நீட் தேர்வு விவகாரத்தை பேசுகிறது திமுக. எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது., என்றது குறிப்பிடத்தக்கது.
அமித் ஷா கூட்டணி ஆட்சி நடக்கும் என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பல இடங்களில் தனிப்பெரும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications