நூதன போஸ்டர் மூலம் சீமான் பரப்புரை.. திமுக பக்கம் திரும்பிய நாதக சந்தேகம்? விவசாயிக்குப் பதில் வேல்?
சென்னை முழுக்க நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் 'சீமானின் சின்னம் என்ன?' என்று போஸ்டர் ஒட்டி பரபரப்புக் கூட்டி இருக்கின்றனர். கூடவே 'எக்ஸ்' தளத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
இந்தத் தேர்தல் களத்தில் ஹைலைட் ஆன சர்ச்சை சீமான் கட்சியின் சின்னம் பறிபோனதுதான். அவருக்கு முன்னால் போன பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்குத் தொடுத்திருந்தார். நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. ஆகவே, கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கித் தர வேண்டும் என நாதக கோர முடியாது எனக் கூறிவிட்டது.
அதன்பின்னர் கரும்பு விவசாயி சின்னத்தை வேறு ஒரு கட்சி பயன்படுத்தத் தடை கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்செய்யப்பட்டது.

அந்த மனுவைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாகப் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சின்னம் பறிபோன விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பு உள்ளது என்று சீமான் குற்றஞ்சாட்டி வருகிறார். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, 'தேர்தல் ஆணையத்தில் சின்னம் கேட்டு அவர் விண்ணப்பிக்கவில்லை. அது யார் தவறு? அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்' என்று கூறியிருந்தார்.
கரும்பு விவசாயி சின்னத்தைப் பெற்றுள்ள பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தக் கட்சி 13 மாநிலங்களில் உள்ளதாக அதன் தமிழ் மாநிலத் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர், பத்து சின்னங்களை தங்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டதாகவும், அதில் கரும்பு விவசாயி சின்னத்தைத் தேர்தல் ஆணையமே கொடுத்துள்ளது என்றும் கூறிய அவர், சீமான் கூட்டணிக்கு வந்தால் தங்களின் சின்னத்தைத் தருவோம் என்று பேசி இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தளவில் ஆளும் கட்சிகளுக்கு முன்பாகவே மக்களவைத் தேர்தல் 2024 க்கான வேட்பாளர்களை அறிவித்து, பரப்புரையைக் கூட தொடங்கி விட்டார். அப்படி அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலரும் சுவரொட்டிகளில் கரும்பு விவசாயி சின்னத்தைப் போட்டு வாக்கு சேகரிக்கும் வேலைகளில் ஈடுபட்டும் வந்தனர்.
இதனிடையே தான் எதிர்பாராத விதமாகச் சின்னம் பறிபோனது. அதை உணர்ந்த எதிர்க்கட்சிகள் 'சின்னத்தையே காப்பாற்ற முடியாத சீமான் எப்படி நாட்டைக் காப்பாற்றப் போகிறார்?' என்று கிண்டலடிக்கத் தொடங்கினர். அதற்குப் பதிலடியாகத்தான் இப்போது நூதன முறையில் 'சீமான் சின்னம் என்ன?' என்ற போஸ்டர் ஊரையே கலக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் பாஜக 3வது இடத்தில் இருப்பதாகத் தொடர்ந்து அண்ணாமலை பேசி வருகிறார். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதிமுகவைப் பலவீனப்படுத்தினால் அந்த வாக்கு பாஜகவுக்கு வரும் என்று ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால் நடைமுறையில் பாஜகவுக்கு அதிமுகவின் ஓட்டுகள் போகவில்லை. அவை நாம் தமிழர் கட்சிக்குத்தான் வந்துள்ளன. அதை உணர்ந்த உளவுத்துறை இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அதை முறியடிக்கத்தான் எங்கள் சின்னத்தை மறைமுகமாக பாஜக முடக்கி உள்ளது என்றார் நாதகவை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன்.
மேலும் குறிப்பிட்ட பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி நிர்வாகிகளிடம் சீமான் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கரும்பு விவசாயி சின்னம் தவறாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அதைத் திரும்ப ஒப்படைக்கும் படியும் அப்போது கூறியதாகவும், ஆனால் அந்தக் கட்சியினர் கோடிக்கணக்கில் பண பேரம் செய்ததாகவும் மணிகண்டன் விளக்கம் கொடுத்துள்ளார்.
நாதகவின் சின்னம் பறிக்கப்பட்ட போதே இங்கே அந்தக் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிடும் எனச் சீமான் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் விவாதித்தாக தெரிவித்த அவர், அந்த வேட்பாளர்களை திமுகதான் மறைமுகமாக நிறுத்த போகிறது என்றும் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
இந்தப் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியுடன் திராவிட தெலுங்கு கட்சி ஒன்று கூட்டணி வைத்துள்ளது. இந்தத் திராவிடத்தின் பின்னால் திமுக உள்ளது. ஆரியமும் திராவிடமும் சேர்ந்து எங்களை வீழ்த்தப் பார்க்கிறார்கள் என்று சில சந்தேகங்களைக் கிளப்பி இருக்கிறார்.
'திமுகவுக்குக் கூடுதலாகத் தேர்தல் முகவர்கள் தேவை. ஆகவே டம்மியாக வேட்பாளர்களைப் போட்டு உள்ளே ஆட்களை இறக்குவது வழக்கம். இப்போது அப்படி டம்மியாக இல்லாமல் இந்தக் கட்சியின் சார்பில் ஆட்களை நிறுத்தி, நாம் தமிழர் கட்சியை முடக்க திமுகவும் துணை போய் இருக்கிறது. சின்னத்தை முடக்கியது பாஜக. அதற்கு வேட்பாளர்களை இறக்குமதி செய்வது திமுக' என்று அவர் பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இதற்கு நடுவே சீமான் வேல் சின்னத்தைத் தேர்ந்தெடுத்து வைத்துள்ளதாகவும், அதில்தான் போட்டியிட உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. அதற்குப் பதிலளித்துள்ள மணிகண்டன், 'சின்னம் தயாராக உள்ளது. அது மக்களை அதிகம் கவரும்படியாக இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்' என்று கூறியுள்ளார்.
ஆக, கரும்புக்குப் பதில் வேல் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications