சென்னையில் இன்று 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது ஏன்?.. வானிலை மையம் விளக்கம்
சென்னை: சென்னையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி வருவது வடகிழக்கு பருவமழையின் தொடக்கம்தான் இந்த மழை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு பலனைக் கொடுக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வெப்பச்சலனத்தாலும் மேலடுக்கு சுழற்சியாலும் இந்த மழை பெய்து வருகிறது.

நல்ல மழை
அதிலும் இன்றைய தினம் சென்னையில் மாலை 4 மணி முதலே கருமேகங்கள் இருட்டிக் கொண்டு வந்தன. பின்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது. முகப்பேர், வளசரவாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, கிண்டி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

வெப்பச்சலனம்
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் சென்னையில் ஒரு மணி நேரமாக பெய்து வரும் மழை முடிந்துவிட்டது. கடல் காற்று பூமி பக்கம் வீசியதால் இந்த மழை பெய்தது. அது போல் வெப்பச்சலனம் காரணமாகவும் இந்த மழை பெய்தது. இது போல் கனமழை வடகிழக்கு பருவமழையின் தொடக்கமாக இருக்கலாம் என தெரிவித்தது.

ஸ்தம்பிப்பு
இந்த திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே சாலைகளால் தாக்கு பிடிக்க முடியாமல் சேதமடைந்தன. இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை இயக்க முடியாமல் ஸ்தம்பித்தனர். போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க வேண்டாம்
இன்னும் 24 மணி நேரத்தில் மேலும் மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் வடக்கு வங்கக் கடல் மற்றும் வடமேற்கு வங்கக் கடல் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications