சாலையோரம் கல்லை நட்டு வைத்து, சாமி என்று கூறும் மூடநம்பிக்கை நிலவுவது துரதிர்ஷ்டவசமானது.. ஐகோர்ட்
சென்னை: சாலையோரம் கல்லை நட்டு வைத்துவிட்டு, துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சாமி சிலை என்று கூறும் மூட நம்பிக்கை நம் சமூகத்தில் தொடர்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்லாவரத்தைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நகரில் எனக்கு சொந்தமான நிலத்துக்கு முன்பு குமரேசன் என்பவர் ஒரு கல்லை வைத்திருக்கிறார்.

அதை சாமி சிலை என்று கூறி, அதை அகற்றவிடாமல் தடுத்து வருகிறார். இதுதொடர்பாக பல்லாவரம் சங்கர் நகர் போலீஸில் புகார் அளித்தபோது இது உரிமையியல் சார்ந்த பிரச்சினை என்பதால் தலையிட முடியாது எனக்கூறி போலீஸார் மறுத்து விட்டனர். எனவே நான் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த கல்லை அகற்ற பல்லாவரம் தாசில்தாருக்கு பாதுகாப்பு வழங்க சங்கர்நகர் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு பின்னர் நீதிபதி அளித்த தீர்ப்பில், கல்லை அகற்ற வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது கல் அல்ல சாமி சிலையாக கருத வேண்டும் என்று எதிர் மனுதாரரரான குமரேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால், அது கல்லா அல்லது சாமி சிலையாக மதிப்புக்கூட்டப்பட்ட சிலையா? என்று சிவில் கோர்ட்டால் முடிவு செய்ய முடியாது. அதிர்ஷ்டவசமாக கல்லா, சாமி சிலையா? என்று முடிவு செய்யும் அதிகாரம் இந்திய நீதித்துறைக்கு வழங்கப்படவும் இல்லை
ஆனால் இதுபோல சாலையோரம் கல்லை வைத்து, துணி சுற்றி, சாமி சிலை என்று கூறும் மூட நம்பிக்கை நம் சமூகத்தில் தொடர்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த வழக்கினால் சிவில் நீதிமன்றத்தின் நேரம்தான் வீணாகும், இந்த வழக்கால் எந்த ஒரு நல்ல பயனும் ஏற்படாது. எனவே, ஒரு வாரத்துக்குள் மனுதாரர் நிலத்துக்கு முன்புள்ள கல்லை அகற்ற வேண்டும். அதற்கு தகுந்த பாதுகாப்பை போலீசார் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications