தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனை குறிவைத்த வருமான வரித்துறை.. ரெய்டில் சிக்கிய நகைகள்.. தீவிர விசாரணை
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அபிராமி ராமநாதன் திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமின்றி பல தொழில்களும் செய்து வருகிறார். அவரது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத நகைகள் சிக்கியதை அடுத்து அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
சென்னை, திருவண்ணாமலை, கோவையில் அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடத்தி வரும் நிலையில் தமிழ் திரையுலகத்திலும், தமிழ்நாட்டிலும் முக்கிய பிரமுகராக விளங்கும் அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அபிராமி ராமநாதன் உன்னோடு கா, அபிராமி, வினோதய சித்தம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகமான அபிராமி மால் இவருக்கு சொந்தமானது. அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான அலுவலகம் ஒன்று போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் எஸ்டேட் இரண்டாவது சாலையில் அமைந்துள்ளது. திடீரென நேற்று மாலை 4 மணி முதல் 12 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அவரது அலுவலகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் என பலரது வீடுகளிலும் தொடர்ந்து அதிரடியாக சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் பிரபல படத்தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் இன்றும் சோதனை நடைபெற்றுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட நகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அபிராமி ராமநாதனை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையின் முடிவில் வரிமான வரி ஏய்ப்பு செய்துள்ளாரா? என்பது தெரியவரும்.












Click it and Unblock the Notifications