அப்பாசாமி நிறுவனத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டு.. கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிப்பு என தகவல்
சென்னை: அப்பாசாமி நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ. 250 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வித் தந்தையாகவும், ஆன்மீகவாதியாகவும் இருக்கிறார் எ.வ. வேலு. தமிழக அரசு மூலமாக நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறைமுகங்கள் துறை என 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன. பணம் அதிகம் புரளும் துறைகளை வைத்துள்ள எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வெள்ளிக்கிழமையன்று வருமான வரித்துறை சோதனை தொடங்கியது.

சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இன்று 4-வது நாளாக ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
இது தவிர தமிழகத்தின் பிரபலமான கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அப்பாசாமி நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமைச்சர் எ.வ வேலுவின் அருணை பொறியியல் கல்லூரி தொடர்புடைய இடங்களில் ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications