சிக்கலில் புரொபஷனல் கொரியர் .. உள்ளே புகுந்த வருமான வரித்துறை! 2 வது நாளாக ரெய்டு விடும் அதிகாரிகள்
சென்னை: தமிழ்நாட்டு முன்னணி கொரியர் நிறுவனமான புரொபஷனல் கொரியர் நிறுவனத்தின் அலுவலகங்களில் 2 வது நாளாக இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். வருமான வரி செலுத்தாமல் இருந்ததாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதன் அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ள தொடங்கினார்.
தமிழ்நாட்டில் இயங்கி முன்னணி கொரியர் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது புரொபஷனல் கொரியர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல கிளைகளை இந்த நிறுவனம் வைத்து உள்ளது.
அதேபோல், இந்தியர்கள் அதிகம் வசிக்கும் துபாய், சவூதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் 3,500 க்கும் அதிகமான புரொபஷனல் கொரியர் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

புரொபஷனல் கொரியர் நிறுவனம்
இந்த நிலையில் புரொபஷனல் கொரியர் நிறுவனம் வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து புரொபஷனல் கொரியர் நிறுவன செயல்பாடுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்து இருக்கின்றனர்.

வருமான வரித்துறை சோதனை
இதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் புரொபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னை இயங்கி வரும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபடத் தொடங்கினார்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புரொபஷனல் கொரியர் தலைமை அலுவலகம் உட்பட சென்னையில் 6 இடங்கள் வருமான வரித்துறை சோதனை தொடங்கியது.

2 வது நாளாக ஐடி ரெய்டு
இந்த நிலையில் 2 வது நாளான சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடி, கோயம்பேடு, கிண்டி, பாரிமுனை, ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள ஆவணங்கள், வங்கிக்கணக்குகள், வருமான வரி செலுத்திய விபரங்களை ஆய்வு செய்து வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளதா என அவர் ஆராய்ந்து வருகிறார்கள்.

முடிவு என்ன?
இந்த வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சோதனையின் முடிவுகள் தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. வருமான வரித்துறை சோதனை நடந்து முடிந்த பிறகே புரொபஷனல் கொரியர் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்று இருக்கிறதா என்று தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications