பணம் பதுக்கல் புகார்.. அமைச்சர் உதயகுமார், எம்எல்ஏக்கள் விடுதி அறைகளில் நள்ளிரவு ரெய்டால் பரபரப்பு
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள அமைச்சர் உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் அறைகளில் நள்ளிரவில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலில் பணம் புழங்கும் என்பதால் வருமான வரித் துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தி வருகின்றனர்.

விடுதி
அந்த வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் வாக்காளர்களுக்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து எம்எல்ஏ விடுதிக்கு இரவில் வருமான வரித் துறை அதிகாரிகள் சென்றனர்.

அறைகளில் சோதனை
அப்போது எம்எல்ஏ விடுதியின் சி பிளாக் பகுதியில் 10-ஆவது மாடியில் உள்ள தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அறை உள்பட மேலும் சில எம்எல்ஏக்களின் அறைகளில் சோதனை செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு
ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு 12.30 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் கூறுகிறது. இதனை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

வேட்பாளர் வீடுகளில் சோதனை
கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் அவரது மகனும் வேலூர் எம்பி தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்த் பள்ளி, கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. அதுபோல் ஒப்பந்ததாரர் பிஎஸ்கே பெரியசாமி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications