சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.. யாருக்கு குறி?
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பெங்களூரு, கொச்சியில் உள்ள வழக்கு தொடர்பாக சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மணல் குவாரி, குத்தகைதாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து தற்போது ஜவுளி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கேகே நகரில் வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டனின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் உள்ள தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கோபாலபுரத்தில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான வினோத் கிருஷ்ணா என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. கே.கே. நகர் மற்றும் தியாகராய நகர் பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, கொச்சியில் உள்ள வழக்குத் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது, அமலாக்கத்துறை சோதனை நடத்துவது அதிகரிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications