தவிக்கும் தாம்பரம்.. பயத்தை காட்டும் பள்ளிக்கரணை காமாட்சி சிக்னல்.. சென்னை ஐடி ஊழியர்கள் கோரிக்கை
சென்னை: சென்னையிலேயே மோசமான சிக்னல்களில் ஒன்று என்றால், அது பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை பகுதியில் உள்ள சிக்னல் தான். இந்த சிக்னலில் தப்பித்து, தாம்பரம், பல்லாவரம், வேளச்சேரி, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், தரமணி செல்வதற்கு ஐடி ஊழியர்கள் தவமே இருக்க வேண்டும். ஏனெனில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நேரவிரயம் ஏற்பட்டு வரும் நிலையில் போலீசாருக்கு ஐடி ஊழியர்கள் வைத்த கோரிக்ககையை பார்ப்போம்.
சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சிக்னலை கடக்காமல் ஐடி ஊழியர்கள் வேலைக்கே போக முடியாது.. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கீழ்கட்டளை, விமான நிலையம் வழியாக பெருங்குடி, வேளச்சேரி, தரமணி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர், சிறுசேரி செல்ல வேண்டும் என்றால், பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சிக்னலை தாண்டித்தான் செல்ல வேண்டும்..

இதேபோல் கிண்டி, வேளச்சேரியில் இருந்து சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், ஓஎம்ஆர், ஈசிஆர் போக வேண்டும் என்றாலும் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சிக்னலை கடக்க வேண்டும். சென்னையில் உள்ள சிக்னல்களிலேயே மிக மோசமான சிக்னல் என்றால் அது காமாட்சி மருத்துவமனை சிக்னல் தான். நான்குபுறமும் வாகனங்கள் வந்து சென்றபடியே இருக்கும். காலையிலும், மாலையிலும் வீட்டில் இருந்து வேலைக்கோ, வேலை முடிந்து வீட்டிற்கோ செல்வது என்பது சவாலானது ஆகும்.
இதனால் வாகன ஓட்டிகள் பலர், அந்த சிக்னலுக்கு பயந்து மாற்று வழிகளை தேடி வருகிறார்கள். ஆனால் மாற்றுவழிகள் இருக்கிறது என்றாலும், அந்த வழிகளில் எல்லாரும் சென்றால், உள்ளூர் பகுதி மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். அத்துடன் அந்த பகுதி முழுக்க குழப்பமான போக்குவரத்து மாற்றங்கள் ஏற்படும்.. மொத்தமாக சாலைகள் எல்லாம் ஸ்தம்பிக்கவும் வாய்ப்பு உள்ளது.
தற்போதைய நிலையில் பள்ளிக்கரணையில் யூடர்ன் வசதிகளை தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. துரைப்பாக்கம் பிஎஸ்ஆர் மால் பகுதியில் உள்ளது போல், பள்ளிக்கரணை லேக் பகுதியிலும், ரேடியல் சாலையிலும், வேளச்சேரி சாலை பகுதியிலும் யூடர்ன் வைத்து திருப்பினால் நேர விரயம் குறைவதுடன், எளிதாக வாகனங்கள் சென்றுவர முடியும் என்று ஐடி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் பள்ளிக்கரணையில் மேடவாக்கம் சந்திப்பு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றி நெரிசலை குறைத்தால் அங்கு தினமும் ஏற்படும் கடுமையான நெரிசலை குறைக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இதேபோல் வேளச்சேரி ரயில் நிலையம் முதல் காமாட்சி மருத்துவமனை வரை உள்ள பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு ஐடி ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications