அன்புவிடம் கிடைத்த “க்ளூ”.. அடுத்த டார்கெட் "பெரிய இடம்?”, வசூல் "நாயகனும்" வளையத்திற்குள்! பரபர
சென்னை: சினிமா பைனான்சியரும், திரைப்பட தயாரிப்பாளருமான அன்புச்செழியன் வீட்டில் கிடைத்த தகவல்களை கொண்டு 20 தயாரிப்பாளர்களை வருமான வரித்துறை குறிவைத்து இருக்கிறது.
மதுரை அன்பு என்று அழைக்கப்படும் பிரபல சினிமா பைனான்சியாரான அன்புச்செழியன் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலான சினிமாக்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் அன்புச்செழியனிடமே கடன் பெற்று திரைப்படங்களை தயாரித்து வருகின்றன.
இந்த நிலையில் அதிமுகவில் அங்கம் வகித்தாலும் அனைத்து கட்சியினருடன் நெருக்கம் பாராடும் மதுரை அன்புவின் இல்ல திருமண விழாவில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

மதுரை அன்பு
சினிமாவுக்கு பைனான்ஸ் செய்வது மட்டுமின்றி கோபுரம் சினிமாஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களையும் தயாரித்து வந்த இவர், சொந்தமான திரையரங்கத்தையும் நடத்தி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு மதுரை அன்புவே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஐடி ரெய்டு
இருப்பினும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முகமாகவே இருந்து வரும் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 5:30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தயாரிப்பாளர்கள்
இதேபோல், முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தயாரிப்பு நிறுவன தலைவர் தியாகராஜன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தலைவர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன தலைவர் ஞானவேல் ராஜா, வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.

அன்புச்செழியனுக்கு கிடைத்த க்ளூ
இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாள பிஸ்மி தெரிவிக்கையில், "மதுரை அன்பு வீட்டுக்கு வருமான வரித்துறை முன்பு சோதனை மேற்கொண்டபோது, எந்தெந்த தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்ற கணக்கு சிக்கியது. ஆனால், அந்த தயாரிப்பாளர்களிடம் அன்புச்செழியனிடம் பணம் வாங்கியதற்கான எந்த கணக்கும் இல்லை. எனவே வருமான வரித்துறை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் இதுகுறித்து விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்பியது.

தனுஷுக்கும் குறி
ஆனால், மதுரை அன்பு அந்த தயாரிப்பாளர்களிடம் தான் சொல்வதைபோல் பதிலளிக்குமாறு அறிவுறுத்தினாராம். இவர்கள் பதிலே கொடுக்காமல் இருந்ததால் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன். நமக்கு கிடைத்த தகவலின்படி 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாக இருக்கிறார்கள். இதில் நடிகர் தனுஷும் அடக்கம்." என்றார்.

விவிஐபிக்கள்
இதேபோல், சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீசை புரட்டிப் போட்ட திரைப்பட "நாயகன்" வீடுகளிலும், பல ஆண்டுகளாக திரைப்படங்களை தயாரித்தும், நடித்தும், பல திரைப்படங்களை போட்டி போட்டு வாங்கும் முன்னணி அரசியல் வாரிசுவுக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்படலாம் என்ற தகவல் பரபரப்பாக வெளியாகி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications