ஆணவப் படுகொலை செய்ததே அதிமுக கிளைச் செயலாளர் தான்! ஸ்டாலின் அளித்த பதிலால் சட்டசபையில் கடும் அமளி!
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெகன் என்ற இளைஞரை ஆணவப் படுகொலை செய்தவர் அதிமுக கிளைச் செயலாளர் என முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதிலால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் டென்ஷனான சபாநாயகர் அப்பாவு, கொலை செய்த பெண்ணின் தந்தை அதிமுக கிளைச் செயலாளர் இல்லை என்பதை எழுதிக் கொடுக்குமாறு தெரிவித்தார்.
சட்டசபை நடவடிக்கைகள் தொடங்கியவுடன் கூச்சல் குழப்பம் நிலவியதால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆணவப் படுகொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் கூட் ரோடு அருகே நேற்று முன் தினம் பட்டப்பகலில் ஜெகன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் சரண்யா என்ற மாணவியை ஜெகன் கோவிலில் வைத்து திருமணம் செய்ததாகவும் இதனால் ஆத்திரமுற்ற அந்தப் பெண்ணின் தந்தை சங்கர் இந்த கொலைச் சம்பத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவதாகவும் கூறினார்.

அதிமுக கிளைச் செயலாளர்
மேலும் ஜெகனை கொலை செய்த சங்கர் மீது காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், சங்கர் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்தார். அதுமட்டுமல்ல கொலை செய்த பெண்ணின் தந்தை சங்கர் அதிமுக கிளை செயலாளர் என்ற தகவலையும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்டார். கொலையாளியை அதிமுக கிளைச் செயலாளர் என ஸ்டாலின் கூறியதால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எழுதிக் கொடுங்கள்
இதனால் சில நிமிடங்கள் பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் டென்ஷனான சபாநாயகர் அப்பாவு, கொலை செய்த பெண்ணின் தந்தை அதிமுக கிளைச் செயலாளர் இல்லை என்பதை எழுதிக் கொடுக்குமாறு எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார். அதன் பிறகும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் உடனே எழுந்து பேசிய அவை முன்னவரான துரைமுருகன் , காவல்துறை அறிக்கையில் இருந்ததை தான் முதல்வர் பேசியிருக்கிறார் என விளக்கம் அளித்தார்.

மிகப் பெரிய ட்விஸ்ட்
கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலையை நிகழ்த்தியதே அதிமுக கிளைச் செயலாளர் தான் என முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம் இந்த வழக்கில் மிகப் பெரிய ட்விஸ்டை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications