இந்திய யூனியன் முஸ்லீம் லீம் கட்சிக்கு ராமநாதபுரம்??.. அதிர்ச்சியில் திருநாவுக்கரசர்!
சென்னை: ராமநாதபுரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரம் குறிப்பாக முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்கிறார்கள்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. தற்போது தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக பேசி வருகிறார்கள்.
காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் மட்டுமே இதுவரை உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முஸ்லீம் லீக் ஒரு தொகுதியில் நிற்கவுள்ளது.
ராமநாதபுரம் தொகுதி
இந்த நிலையில், ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது காங்கிரஸ் வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருநாவுக்கரசர்
ஏற்கனவே ராமநாதபுரம் தொகுதியை காங்கிரஸ் கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு போட்டியிட ஆயத்தமாக இருந்தார் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர். ஆனால் அதில் திமுக மண்ணை அள்ளிப்போட்டு விட்டதாக சொல்கிறார்கள்.
பாதுகாப்பான தொகுதி
திருநாவுக்கரசர் ராமநாதபுரத்தில் போட்டியிடக் கூடாது என்று திமுக தலைமை விரும்புகிறதா என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது. ராமநாதபுரம்தான் திருநாவுக்கரசருக்கு பாதுகாப்பான தொகுதி. அது இல்லை என்றாகியுள்ளதால் அவர் எங்கு போவார் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி
மற்றொரு கூட்டணிக் கட்சியான ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு வேலூர், மயிலாடுதுறை ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒன்று ஒதுக்கப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.
வேலூர்
பெரும்பாலும் மயிலாடுதுறை கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள். காரணம், வேலூர் தொகுதியில் துரைமுருகன் கோட்டாவில் அவரது மகன் கதிர் ஆனந்த் களம் இறங்க மிக அதிக வாய்ப்பு உள்ளதாம்.