எல்லோரும் ஒரு தாய் மக்கள்! இருளை நீக்க உதிக்கும் ஒளியின் அடையாளமாக தீபாவளி! காதர் மொகிதீன் வாழ்த்து!
சென்னை: இருளை நீக்க உதிக்கும் ஒளியின் அடையாளமாகத் தீப ஒளி திருவிழா அமைந்திருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :

தீப ஒளி திருவிழா கொண்டாடும் தமிழகத்து இந்து சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். இருளை நீக்க உதிக்கும் ஒளியின் அடையாளமாகத் தீப ஒளி திருவிழா அமைந்திருக்கிறது. விண்ணிலும் மண்ணிலும் மண்டியிருக்கும் இருளை ஓட்டும் ஒளியை விட, இதயத்தைக் கவ்வியிருக்கும் இருளை அகற்றும் ஒளியே மானிடருக்குப் பெரும் நன்மை தருவதாகும். அதனால் தான் இதனை "உள்ளிருளைப் போக்கும் ஒளி" என்று ஆன்மீகப் பெரியோர் கூறி வந்திருக்கிறார்கள்.
இன்றைய மனித சமுதாயத்தில் அறியாமை, கல்லாமை, இல்லாமை, சமூக சுமூகம் இல்லாமை, பொறாமையும் ஒருவருக் கொருவர் கொண்டுள்ள பகைமையும் , வன்முறையும் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது, இவற்றுக் கெல்லாம் முடிவும் விடிவும் ஏற்படுத்தக் கூடிய அறிவொளியும், நல்லெண்ண ஒளியும், சமுதாய சௌஜன்ய ஒளியும், ஏற்பட வேண்டும் என்ற பிரார்த்தனை நடத்திட வேண்டிய காலம் இது.
இக்காலத்தில் வந்திருக்கும் தீப ஒளி திருவிழா மனித நேயத்தை வளர்க்கும் மனவெளிச்சத்தை தரும் விழாவாக ஆசிப்போம்; எல்லோரையும் ஒரு தாய் மக்களாக நேசிப்போம் - எங்கும் எதிலும் இறையருள் நிறைந்திட யாசிப்போம். இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications