தியாகராய நகர் தொகுதி யாருக்கு? ஸ்டாலின் முன்னிலையில் ஜெ. அன்பழகன் குடும்பத்தினர் பஞ்சாயத்து
சென்னை: திமுகவில் சென்னை தியாகராய நகர் தொகுதி (தி.நகர்) யாருக்கு என்பது தொடர்பாக கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மறைந்த எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் குடும்பத்தினர் பஞ்சாயத்து செய்தனராம்.
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான முதல் மக்கள் பிரதிநிதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெ. அன்பழகன். சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

ராஜா அன்பழகனுக்கு பதவி
ஜெ. அன்பழகன் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் ராஜா அன்பழகனுக்கு சென்னை மேற்கு திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டார்.

தி.நகருக்கு விருப்ப மனு
இந்த நிலையில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு ராஜா அன்பழகன் விருப்ப மனு கொடுத்துள்ளார். ஆனால் ஜெ. அன்பழகனின் உடன்பிறந்த தம்பியான குட்டி என்ற கருணாநிதி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். ராஜா அன்பழகனுக்கு சீட் கொடுத்தால் கட்சிக்கு கெட்ட பெயர்தான் வரும் என்கிறாராம்.

ஸ்டாலினிடம் வேண்டுகோள்
இதையடுத்து ஜெ. அன்பழகனின் மனைவி நேராக மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். கட்சிக்காக பணி செய்துதானே என் கணவரை பறிகொடுத்தேன். என் மகனுக்கு இப்ப நீங்க சீட் கொடுத்துதான் ஆகனும் என கண்ணீர்மல்க பேசியிருக்கிறாராம். இது தொடர்பாக நல்ல முடிவு எடுக்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறாராம்.

தி.நகரில் கடும் போட்டி
அதிமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக இங்கு நிற்பதால் கடும் போட்டி உருவாகும். அதேநேரத்தில் ஜெ. அன்பழகன் குடும்பத்தினருக்கு சீட் கொடுக்க வேண்டுமா? இல்லையா? என்பதில் கட்சி தலைமை தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அந்த குடும்பத்தினர் மீது அதிருப்தி இருப்பதையும் தலைமை கவனத்தில் கொண்டால் நல்லது என்கிற கருத்தையும் திமுகவினர் முன்வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications