Exclusive: அத்தையோட ஆன்மா என்னை கைவிடவில்லை; ஸ்டாலின் மேல்முறையீடு செய்யமாட்டார் -உருகும் ஜெ.தீபா!
சென்னை: மறைந்த தனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா தன்னை கைவிடவில்லை என உருகுகிறார் ஜெ.தீபா.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமை ஆக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அது தொடர்பாக ஜெ.தீபாவிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
அப்போது ஒன் இந்தியா தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு;

அத்தையின் ஆன்மா
''எனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா என்னை கைவிடவில்லை என நினைக்கிறேன். எங்கள் குடும்ப சொத்தை நான் அனுபவிக்க வேண்டும் என்பதே மறைந்த எனது பாட்டி, அப்பா, அத்தை உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்திருக்கும். அதனால் அவர்களது ஆன்மா தான் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்ததன் பின்னணியில் இருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. அதிமுக ஆட்சியில் அத்தையோட வீட்டை கைப்பற்றியது முதல் நிம்மதி இல்லாமலே இருந்து வந்தேன்.''

ஸ்டாலின் மீது நம்பிக்கை
''நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்கு செல்லமாட்டார் என நம்புகிறேன். அத்தையோட வீட்டுக்கு செல்வது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சகோதரர் தீபக் உள்ளிட்ட அனைவருடனும் கலந்துபேசிய பிறகே அத்தையோட வீட்டுக்கு செல்வது பற்றி பேச முடியும். இது ஆரம்பக்கட்டம், இப்போதே உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லமுடியாது. இன்னும் சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளதால், அது முடிந்தபின்னரே அத்தை வீட்டுக்கு செல்வது பற்றி என்னால் பேசமுடியும்.''

வேதா நிலையம்
''வேதா நிலையம் இல்லம் வாரிசுகளான எங்களுக்கு சேர வேண்டும் என்பதே மறைந்த எனது மூதாதையர்களின் விருப்பமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இப்போது இல்லை, அவரை சந்திப்பது குறித்து நான் யோசிக்கக் கூட இல்லை. இந்த தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான், இருப்பினும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அத்தை மட்டுமல்ல எனது அப்பாவும், பாட்டியும் கூட அந்த வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள்.''
Recommended Video

எடப்பாடி பழனிசாமி
''இந்த தருணத்தில் பழசை பற்றி பேசவிரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி தனி நபராக இதை செய்யவில்லை, அரசாங்க ரீதியில் முடிவெடுத்து அத்தை இல்லத்தை அரசுடைமை ஆக்கினார். இது குறித்தும் இன்னும் நான் பேசினால் அது அரசியல் பேசுவது போல் ஆகிவிடும், அதனால் அதை விட்டுவிடுவோம்.'' எனக் கூறினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபா.











Click it and Unblock the Notifications