Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடன்காரர்களுக்கு ஜாக்பாட்! இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை நோ போன் கால்ஸ் - RBI சூப்பர் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்யும் முறைகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூல் செய்யும் போது வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதை தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.... அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்..

பொதுவாக வங்கிகளிடம் கடன் பெற்று அதை திரும்ப செலுத்த தவறுபவர்களை கடன் வசூல் முகவர்கள் மிக மோசமாக நடத்துவதாகவும், அநாகரிகமான முறையில் மிரட்டுவதாகவும் நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன..

RBI Loan Recovery Rules

அதனால்தான் இந்த புகார்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளியை வைக்க ரிசர்வ் வங்கி முயன்றுள்ளது.. இதற்காக புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.. இந்த வழிகாட்டுதல்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

கடன் வசூல் முறைகள்

இதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், கடன் வசூல் செய்யும் முகவர்கள் இனி தங்களுக்கு தோன்றிய நேரத்தில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள முடியாது. குறிப்பாக காலை எட்டு மணிக்கு முன்பாகவும், மாலை 7 மணிக்கு பின்பாகவும் வாடிக்கையாளர்களை போனில் அழைப்பதற்கோ அல்லது அவர்களை நேரில் சந்திப்பதற்கோ ரிசர்வ் வங்கி முற்றிலுமாக தடை விதித்துள்ளது.

இது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட நேரத்தையும் அமைதியையும் உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் பொருட்டு, கடன் வசூல் முகவர்களால் வாடிக்கையாளர்களுக்கு செய்யப்படும் அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் வங்கிகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கஸ்டமர்கள் - பேங்க் ஏஜெண்டுகள்

இப்படி பதிவு செய்யப்படுவதன் மூலம் முகவர்கள் வாடிக்கையாளர்களிடம் பேசும் போது வரம்பு மீறுகிறார்களா அல்லது அச்சுறுத்தும் மொழியை பயன்படுத்துகிறார்களா என்பதை வங்கிகளால் கண்காணிக்க முடியும்.... ஒருவேளை முகவர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டால், அந்த பதிவுகளை ஆதாரமாக பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவும் இது வழிவகை செய்யும்.

கடன் வசூல் முகவர்கள் வாடிக்கையாளர்களிடம் பேசும்போது மிகக் கண்ணியமாகவும் நாகரிகமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது, தரக்குறைவாக பேசுவது அல்லது வாடிக்கையாளர்களை மனரீதியாக துன்புறுத்தும் வகையில் பொருத்தமற்ற மெசேஜ்களை செல்போனிலோ அல்லது சோஷியல் மீடியா வாயிலாகவோ அனுப்புவது போன்ற செயல்கள் "கடுமையான நடைமுறைகள்" என வகைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன.

கடன் தரும் வங்கிகள் - ரிசர்வ் பேங்க்

கடன் வசூல் என்பது கடன் பெற்ற நபரோடு மட்டுமே முடிந்துவிட வேண்டும் என்பதையும் ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது. கடன் வாங்கியவரின் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் அல்லது அவர் பணியாற்றும் இடத்திலுள்ள சக ஊழியர்களை தொடர்பு கொண்டு கடன் குறித்துப் பேசுவதோ அல்லது அவர்களை தொந்தரவு செய்வதோ இனி சட்டப்படி குற்றமாகக் கருதப்படும்.

முகவர்கள் வாடிக்கையாளர் குறிப்பிடும் இடத்திலோ அல்லது அவரது இல்லத்திலோ தான் அவரைச் சந்திக்க வேண்டும். அங்கெல்லாம் அவர் இல்லாத பட்சத்தில் மட்டுமே அவரது பணியிடத்திற்குச் செல்ல அனுமதி உண்டு. மேலும் ஒருவரது குடும்பத்தில் யாராவது இறந்துவிட்டால் அல்லது ஏதேனும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் அந்த இக்கட்டான காலங்களில் கடன் வசூலுக்காக தொந்தரவு செய்யக் கூடாது.

அதேபோல் திருமணங்கள் அல்லது முக்கியமான மத விழாக்கள் நடைபெறும் காலங்களிலும் வாடிக்கையாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் கடன் வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது..

முழு பொறுப்பு வங்கிகள்தான்

இந்த புதிய விதிகளை சரியாக நடைமுறைப்படுத்த, கடன் வசூல் முகவர்களுக்கு முறையான பயிற்சிகளை வங்கிகள் கட்டாயமாக வழங்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பயிற்சி பெற்ற முகவர்கள் மட்டுமே வசூல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். முகவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் அல்லது அத்துமீறலுக்கும் அந்தந்த வங்கிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

கடன் வசூல் தொடர்பான புகார்களை தீர்க்க ஒவ்வொரு வங்கியும் ஒரு தனித்துவமான புகார்த்தீர் அமைப்பை உருவாக்க வேண்டும் மற்றும் அது குறித்த தகவல்களை கடன் ஒப்பந்தத்திலேயே வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். இந்த புதிய வழிகாட்டுதல்கள் அனைத்தும் வரும் ஜூலை 1 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரும்" என்றெல்லாம் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சபாஷ் ரிசர்வ் வங்கி

இந்த அறிவிப்பு பொதுமக்களின் கவனம் பெற்று வருகிறது.. கடன் தவணையை தர முடியாமல் எத்தனையோ குடும்பங்களில், தற்கொலைகள் நடக்கின்றன.. கணவன் தவணை கட்டாததால், மனைவியை பிணையாக இழுத்து சென்ற சம்பவமும் நம்முடைய தமிழகத்திலேயே நடந்துள்ளது..

இப்படிப்பட்ட சூழலில் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவுகள், கெடுபிடி தரும் நிதி நிறுவனங்களுக்கு கடிவாளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..

அத்துடன் வங்கித் துறையில் கடன் வசூல் முறையை முறைப்படுத்துவதோடு வாடிக்கையாளர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் என்றும் நம்பப்படுகிறது...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+