Jacto Geo Protest: சஸ்பெண்ட் உத்தரவு ரத்து... 1,500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு
சென்னை: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை பள்ளி கல்வித்துறை ரத்து செய்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த மாதம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடந்தது.

அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்தது. மேலும் பணிக்கு திரும்ப காலக்கெடு நிர்ணயித்தது.
இதையடுத்து, ஆசிரியர்கள் 30-ந்தேதி பணிக்கு திரும்பினர். அதன்பின் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். ஆனாலும் அரசு நிர்ணயித்த காலக்கெடுக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் 1500க்கும் மேற்பட்டவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்தது.
இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிட வேண்டும் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications