ஜாபர் சாதிக்கிடம் கிடுக்குப்பிடி விசாரணை! மேலும் 4 நாட்கள் காவலுக்கு நீதிபதி அனுமதி! அடுத்தது என்ன?
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மேலும் நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்க துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே இதே வழக்கில் ஜாபர் சாதிக்கை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 15ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து, ஜூன் 26ம் தேதி கைது செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்-கை மூன்று நாட்கள் அமலாக்கத்துறை காவல் வழங்கி கடந்த 17ம் தேதி உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை காவல் முடிந்து இன்று ஜாபர் சாதிக், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணை நிறைவடையாததால் மேலும் 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி மேலும் நான்கு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மீண்டும் ஜூலை 23ம் தேதி மாலை ஐந்து மணிக்குள் ஜாபர் சாதிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் உத்தரவிட்டார்.இதனையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ஜாபர் சாதிக் அழைத்துச் செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications