ஜெய்பீம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்; பாராட்டு சர்டிஃபிகேட் கொடுத்த அண்ணாமலை!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார்.
அதேவேளையில் வரலாற்றை படமாக எடுக்கும் போது அதன் உண்மைத்தன்மை மாறாமல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.. மத்திய அரசு புது சட்டம்
ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற சில தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்றும் ஆனாலும் இந்தப் படம் அற்புதமான படம் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஜெய்பீம் படம்
இருளர் இன மக்களின் துயரத்தை மையமாக வைத்து சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் வன்னியர் சமுதாய மக்களிடையே கடும் எதிர்ப்பை பெற்று வருகிறது. மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவின் பெயரை வில்லனுக்கு சூட்டப்பட்டது ஏன் என தொடர்ந்து படக்குழுவினருக்கு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத்திரைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் என பலரும் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பார்க்க வேண்டிய படம்
அந்த வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஜெய்பீம் திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். மேலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக வலுவாக காலுன்றிவிட்டதாகவும் திமுகவுக்கு மாற்றுசக்தியாக உருவெடுத்துவிட்டதாகவும் அண்ணாமலை கூறியிருக்கிறார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சிலர் சமூக வலைதளப் போரில் ஈடுபடுவதாகவும் அதனை சந்திக்க தாங்களும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சமூக வலைதளப் போர்
பாஜகவின் கருத்துக்களை ஏற்று களத்தில் மோத முடியாதவர்கள் டிவிட்டர் மூலமும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் மோதி வருவதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் யாரையும் தப்பவிடக் கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் பாலியல் வன்முறையில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது எனக் கூறினார்.
எதிர்வினை
இதனிடையே தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றுசக்தி பாஜக தான் என அண்ணாமலை கூறியிருப்பதை அதிமுக எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறது எனத் தெரியவில்லை. அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணியில் இருக்கும் சூழலில், அதிமுக இதற்கு என்ன எதிர்வினையாற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.