சூர்யா பேனருக்கு தீ..! வலுக்கும் ஜெய்பீம் சர்ச்சை! 4 பேர் மீது வழக்கு!
சென்னை: ஜெய்பீம் படத்திற்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டம் செய்து வரும் நிலையில், சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது பேனருக்கு தீ வைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

பேசுபொருளான ஜெய்பீம்
சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜெய்பீம் தியேட்டரில் வெளியானால் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குமோ அந்த அளவிற்கு சமூக வலைதளத்தில் பேசுபொருளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் திரைக்கதையின் கரு பழங்குடி மக்கள் மீது அதிகாரம் எப்படி செலுத்தப்படுகிறது, அவர்கள் மீது பொய் வழக்குகள் ஏன் போடப்படுகிறது அதை எதிர்த்து அவர்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதுதான்.

தொடர்ந்து எதிர்ப்பு
ஆனால் இந்த படம் வெளியானதில் இருந்தே பாமக மற்றும் வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்த படத்தில் வன்னியர்கள் மீது அவதூறு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு. இதற்காக நடிகர் சூர்யா மற்றும் அமேசான் நிறுவனங்கள் 5 கோடி ரூபாய் இழப்பு தரவேண்டும் என வன்னியர் சங்கம் ஜெய்பீம் தயாரிப்பு குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் ஆங்காங்கே வன்னியர்கள் சூர்யாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்புவதும் அவர் சார்ந்த போஸ்டர்களை கிழிப்பதும் எரிப்பதுமாக இருக்கின்றனர்.

அக்னி கலசம்
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் குறியீடாக வைத்துள்ள காட்சி சமீபத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திர பிள்ளை கிராமத்தில் சூர்யாவின் பேனர்களை கடந்த 14ம் தேதி தீ வைத்து எரித்துள்ளனர். சேந்திர பிள்ளை கிராமத்தில் சிங்கம் சூர்யா நற்பணி இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் நடத்தி வருகின்றனர். அவர்கள் அந்த கிராமத்தில் வைத்திருந்த பேனரைத்தான் கொளுத்தி உள்ளார்.

4 பேர் மீது வழக்குப்பதிவு
இதனால் மனவேதனை அடைந்த நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் முறையிட்டனர் பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகரன் கொடுத்த புகாரில் சேந்திர பிள்ளை கிராமத்தை சேர்ந்த செந்தூரப் பாண்டியன், வேணுகோபால் உட்பட 4 பேர் மீது பரங்கிப்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications