வன்னியர் மக்களை இழிபடுத்தியதாக புகார்..! 'ஜெய்பீம்’ இயக்குநர், நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு..!
சென்னை : ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னிய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், கொச்சை படுத்தும் வகையிலும் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவை இழிவுபடுத்தும் வகையிலும் காட்சிகள் அமைந்திருப்பதாக அளிக்கப்பட்ட புகாரில், ஜெய்பீம் இயக்குநர் மற்றும் நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ஜெய்பீம் படத்தை தாயாரித்திருந்தார். இதில் சூர்யாவே நாயகனாகவும் நடித்திருந்தார்.
கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
ஜெய்பீம் படம் குறித்து புகார்
இந்நிலையில், ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர் வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜெய்பீம் படம் தொடர்பாக புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தேச ஒற்றுமையை சீர்குலைக்கவும், இந்து வன்னியர் சமூக மக்களை புண்படுத்தியும் ஜெய்பீம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மேலும் அகரம் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்து, அதைக்கொண்டு ஜெய்பீம் படத்தை எடுத்துள்ளதாகவும், அகரம் அறக்கட்டளையின் நோக்கங்களுக்கு எதிராகவும் குற்றங்கள் செய்திருப்பதாகவும் அவர் புகார் அளித்திருந்தார்.இதனால் ஜெய்பீம் படத் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், கலை இயக்குநர், மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கவசம் கிளாரட் சபை ரபேல்ராஜ் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு
ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சந்தோஷ் நாயகர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், புகார் மீது ஐந்து நாட்களில் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென ஆய்வாளருக்கு உத்தரவிட்டது. மேலும் முதல் தகவல் அறிக்கையை மே 20ஆம் தேதி தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்குப் பதிவு
இந்நிலையில் கடந்த 29ம் தேதி வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நிலையில் இன்று வேளச்சேரி காவல் நிலையத்தில் ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீது 295(A) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.