தப்பில்லை.. ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் மதத்தை குறிக்காது.. மன உணர்வையே குறிக்கும்! ஆளுநர் தமிழிசை விளக்கம்
சென்னை: அந்த நாமம் வாழ்க... இந்த நாமம் வாழ்க.. என்று சொல்லும்போது ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவதில் தவறில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்ரீராம் என்று பாகிஸ்தான் வீரரை பார்த்து அகமதாபாத் ரசிகர்கள் கோஷமிட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. போட்டியில் முன்னதாக விளையாடிய பாகிஸ்தான் 191 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் வீரர் ரிஸ்வான் 49 ரன்களில் அவுட்டானார். அவர் மைதானத்திலிருந்து வெளியேறி பெவிலியனுக்கு நடந்து செல்லும்போது இந்திய ரசிகர்கள் சிலர் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்திற்கு ஆதரவாக கருத்துக்கூறி வருகின்றனர். ராமருக்கும், கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? என்று கேள்வி எழுப்பினார் சீமான்.
இந்த நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் போது ரசிகர்கள் கோஷமிடுவது தவறில்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். விளையாட்டின் போது பிரார்த்தனை செய்வது எப்படி தவறில்லையோ அதே போல ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுவது தவறில்லை என்றும் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதை அரசியலாக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் யார்? விளையாட்டை அரசியலாக பார்க்கக் கூடாதென்று நினைப்பவர்கள் இதை அரசியலாக பார்க்கக் கூடாது. இதை நீங்கள் அரசியல் பண்ணனும் என்றால் நியாயமாக அரசியல் பண்ணுங்க என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே புதுச்சேரியில் தனியார் வங்கி திறப்பு விழாவில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது, அவர், "நம் நாட்டில் நம் முயற்சியில் உருவாக்கப்பட்ட விண்கலத்தை செலுத்தும் போது வந்தே மாதரம் என்று கூறும் போது விளையாட்டு போட்டிகளில் வெற்றியை கொண்டாட ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுவதில் தவறில்லை என்று சொன்னார்.
அந்த நாமம் வாழ்க இந்த நாமம் வாழ்க என்று கூறும்போது ஜெய்ஸ்ரீராம் என்று கூறுவது மதத்தைக் குறிக்காது, மன உணர்வையும் வெற்றியையும் குறிக்கும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications