ஜல்லிக்கட்டு போராட்ட விசாரணை கமிஷனின் ஆயுள் காலம்.. மேலும் 3 மாதம் நீட்டிப்பு
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கான அவகாசத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த போராட்டத்தின் போது திடீரென கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர்.

அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையமானது ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 956 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான விசாரணை 6 மாதங்களில் முடிக்கப் படும் என்றும், பல சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே ஜல்லிக்கட்டு விசாரணை தொடர்பான வழக்கு விசாரணையின் போது விசாரணை ஆணையத்துக்கு மேலும் 3 மாதங்கள் மட்டுமே நீட்டிப்பு தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஆணையத்துக்கான காலக்கெடு முடிவடைந்ததை தொடர்ந்து மேலும் 3 மாதங்களுக்கு அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications