வந்தாச்சு ரம்ஜான் பண்டிகை.. வெள்ளிக்கிழமை பிறை பார்க்க அறிவுறுத்தல்! ஜமாத்துல் உலமா சபை அறிவிப்பு
சென்னை: ரமலான் மாதம் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் பிறையை வரும் வெள்ளிக்கிழமை பார்க்கலாம் என்று ஜமாத்துல் உலமா சபை அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிவாசல் செயல்பாடுகள் மற்றும்
இஸ்லாமிய உலமாக்களின் தலைமையகமாக இருப்பது ஜமாத்துல் உலமா சபை. இந்த அமைப்பு வழங்கும் அறிவுறுத்தல்களின்படியே பெரும்பாலான மசூதிகள் மற்றும் உலமாக்களின் செயல்பாடுகள் அமைகின்றன.

தலைமை காஜியின் அறிவிப்பை ஏற்று ரமலான், பெருநாள் தொடர்பான பிறை அறிவிப்புகளை ஜமாத்துல் உலமா சபையே வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் தொடங்கிய இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்து இருக்கிறது. பிறை அடிப்படையில் கணக்கிடப்படும் அரபு ஆண்டின்படியே ரமலான், ரம்ஜான் பண்டிகை, ஹஜ் யாத்திரை, பக்ரீத் பண்டிகை, முஹர்ரம் போன்றவை வருகின்றன.
குறிப்பாக ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரசி அல்லது கோதுமை போன்ற பொருட்களை இஸ்லாமியர்கள் வழங்க வேண்டும்.
அரபு மாதங்களில் ரமலானுக்கு அடுத்த மாதமான ஷவ்வாலின் முதல்நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்றோடு தமிழ்நாட்டில் 27 வது நோன்பை இஸ்லாமியர்கள் நிறைவு செய்து இருக்கிறார்கள்.வியாழன் அன்று 28 வது நோன்பையும், வெள்ளிக்கிழமை 29 வது நோன்பையும் நோற்க உள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நோன்பு திறந்த பிறகு ரம்ஜானுக்கான பிறையை பார்க்கலாம் என்று ஜமாத்துல் உலமா சபை அறிவித்து உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "வரும் 21.04.2023 வெள்ளிக்கிழமை அன்று ஷவ்வால் (பெருநாள்) பிறை பார்க்க வேண்டும்.
தங்கள் பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட பிறை பார்க்கப்பட்ட தகவல் இருந்தால் நம் சபையின் பிறைக்கான மாநில பிரதிநிதிகளான மௌலவி, K.M. செய்யது அபூதாஹிர் சிராஜி ஹழ்ரத் (9444494628) மெளலவி, M. சையது மஸ்வூது ஜமாலி ஹழ்ரத் (9444119195) ஆகியோரிடம் உடனடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். அவர்கள் தமிழக அரசின் அவர்களுடன் கலந்து பேசுவார்கள். மேலும் தலைமை காஜி அவர்களின் இறுதியான முடிவு அனைவருக்கும் தாமதமின்றி தெரிவிக்கப்படும்." என்று அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications