"4 மாதங்களுக்கு கூட படம் ரிலீஸ் ஆகாது!" ஜனநாயகன் சிக்கல்.. தராசு ஷியாம் சொன்ன முக்கியமான பாயிண்ட்
சென்னை: ஜனநாயகன் பட சென்சார் விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான அப்பீலை உயர்நீதிமன்ற அமர்வு ஏற்றுள்ளதால் படத்திற்கான சிக்கல் தொடர்கிறது. இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் படம் 4 மாதங்கள் கூட ரிலீஸ் ஆகாமல் போகலாம் என்று மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் கூறியுள்ளார்.
ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ளது. படத்திற்கு சென்சார் சான்றிதழ் தருவதாகச் சொல்லிவிட்டு, பிறகு மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி சென்சார் சான்றிதழை வழங்க உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஐகோர்ட் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

ஜனநாயகன் விவகாரம்
அந்த வழக்கு விசாரணை நடந்து வந்த சூழலில், இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் சென்சார் போர்ட் அப்பீலை நீதிமன்றம் ஏற்றது. இதனால் படம் மறு தணிக்கைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படம் ரிலீஸ் ஆவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தல் அறிவிப்பு வந்தால் படம் ரிலீஸ் ஆகாமல் போக வாய்ப்பு இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
தராசு ஷியாம்
இது தொடர்பாக அவர் சன் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "ஜனநாயகன் படத்திற்குச் சிக்கல் மீது சிக்கல் வந்துள்ளது. ஆனால், இதெல்லாம் அவர்களாகவே தேடிக்கொண்டது. சென்சார் போர்ட் விதிகள் என்பது முழுமையானது. ரூல்ஸ் எல்லாம் மிகத் தெளிவாக இருக்கும். சட்ட ரீதியாக எந்தவொரு வாய்ப்பும் இல்லாதபோதே வழக்கு தொடர வேண்டும். ஆனால், இவர்கள் சென்சார் போட்டு சொன்னவுடனேயே வழக்கு போட்டிருந்தனர். மறு தணிக்கை வரை கூட காத்திருக்கவில்லை. மறு தணிக்கை முடிவுக்கு இவர்கள் காத்திருந்திருக்க வேண்டும். அதில் ஏனோ அவசரப்பட்டுவிட்டார்கள்.
அவசரம்
நீதிமன்றத்திற்கு வந்தது அவசரமான முடிவு. அதன் பிறகு தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்ட் அப்பீல் செய்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் இது மேற்கோள் தீர்ப்பாகிவிடும். நாடு முழுப் படம் தொடர்பான விவகாரங்களில் அனைத்துத் தயாரிப்பாளர்களும் தனி நீதிபதி தீர்ப்பை மேற்கோள் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். எனவே, அவர்கள் அப்பீல் செய்தார்கள். அந்த அப்பீலை ஏற்றுக்கொண்டு உள்ளனர்.
வேண்டும் என்றால் இவர்கள் மீண்டும் சட்ட நடவடிக்கை தேவை என வேறு ஒரு தனி நீதிபதியிடம் செல்லலாம். ஆனால், அது மீண்டும் மீண்டும் இந்த சுழற்சியில் தான் மாட்டிக் கொள்ளும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வருமான வரிக்கு எப்படித் தீர்ப்பாயம் இருக்கிறதோ.. அதேபோல சென்சாருக்கும் ஒரு தீர்ப்பாயம் இருந்தது. அதில் சினிமா துறையில் அனுபவம் பெற்றவர்கள் இருந்தனர். சென்சார் பிரச்சினைக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்குப் பதிலாக அந்த தீர்ப்பாயத்திற்குச் சென்று கொண்டு இருந்தார்கள். ஆனால், மோடி அரசு அந்தத் தீர்ப்பாயத்தைக் கலைத்திருந்தனர்.
ரிலீஸ் ஆகாமல் போகலாம்
ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் கவலை தருவதாகவே இருக்கிறது. வரும் காலங்களில் அமலாக்கத் துறையைப் போல சென்சார் போர்ட்டை கூட ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் படமே ரிலீஸ் ஆகாது. தேர்தல் முடியும் வரை 3, 4 மாதங்கள் கூட படம் ரீலீஸ் ஆகாமல் போகலாம். அப்போது படத்திற்கான ஹைப் பாதிக்கப்படும். இதனால் தான் சொல்கிறேன் சென்சாரை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications