கரூர் துயரம்.. தீபாவளிக்கு அப்படி எதுவும் வெளியிடாதீங்க.. ஜனநாயகன் படக்குழுவிடம் கேட்டுக்கொண்ட விஜய்
சென்னை: ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிளை தீபாவளியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த சூழலில், தற்போது அதனை ஒத்தி வைக்குமாறு தவெக தலைவர் விஜய் படக்குழுவிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கரூர் துயரத்தால் மக்கள் சோகத்தில் உள்ள நிலையில், தீபாவளிக்கு முதல் பாடலை வெளியிடுவது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று விஜய் கருதுவதாக கூறப்படுகிறது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய் தீவிர அரசியலுக்கு வந்துள்ளதால், இதுவே அவரின் கடைசிப் படமாக அமைந்துள்ளது. அரசியலுக்கு வந்த போதே இதுவே தனது கடைசி திரைப்படம் என்று விஜய் அறிவித்துவிட்டார். இந்தப் படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரன் ஒன்று படங்களை இயக்கிய அ.வினோத் இயக்கி இருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிவிட்ட சூழலில், மே மாதத்தோடு நிறைவு பெற்றது. அதன்பின் சின்னச் சின்ன காட்சிகளை மட்டும் அ.வினோத் இயக்கி வந்தார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி டியோல், பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜனநாயகன் க்ளிம்ஸ் காட்சிகள் வெளியாகியது.
அதன் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தீபாவளியன்று ஜனநாயகன் படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தீபாவளி முதலே புரமோஷன் நிகழ்ச்சிகளை தொடங்க படக்குழு ஆயத்தமாகி வந்தது.
இந்த நிலையில் கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதனால் சோகத்தில் உள்ள விஜய், ஒரு வாரத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை.
தவெக நிர்வாகிகளும் தலைமறைவாக இருக்கும் சூழலில், ஜனநாயகன் படத்தின் பாடலை வெளியிடுவது சரியாக இருக்காது என்று விஜய் கருதி இருக்கிறார். இதனால் தீபாவளியை முன்னிட்டு ஜனநாயகன் தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியையும், விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்று படக்குழுவிடம் விஜய் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் பட்சத்தில் அது தவெகவுக்கும், விஜய்க்கும் மேலும் பின்னடைவை கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னரும், பாதிக்கப்பட்டவர்களுக்காக இரங்கல் கூட்டம் நடத்திய பின்னரும் ஜனநாயகன் விளம்பர நிகழ்ச்சியை செய்வதே சரியாக இருக்கும் என்றும் சிலர் அறிவுறுத்தி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications