விஜயை விட வடிவேலுக்கு அதிக கூட்டம் வந்துச்சு.. அவராலேயே ஜெயிக்க முடியலை! ஜவாஹிருல்லா அதிரடி!
மயிலாடுதுறை: கடந்த காலங்களில் விஜய்யைவிட வடிவேலுவிற்கு அதிக அளவில் கூட்டம் கூடியிருக்கிறது, ஆனால் வடிவேலுவால் வெற்றி பெற முடியவில்லை என விஜய் மக்கள் சந்திப்பு பயணம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மமக தலைவர் ஜவாஹிருல்லா உரையாற்றினார்.
பின்னர் பேசிய அவர், "வக்ஃபு திருத்த சட்டத்தில் உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு வழங்கிய தீர்ப்பு பாரபட்சமாக அமைந்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி உட்பட திமுக, காங். உட்பட பல்வேறு கட்சிகள் அந்த வழக்கில் இணைந்திருந்தன.

ஜவாஹிருல்லா பேட்டி
இந்த வழக்கில் முஸ்லிம் அல்லாதவர்கள் வக்ஃபில் இடம்பெறலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இந்து அறநிலையத்துறை அறக்கட்டளை, சீக்கிய குர்த்வாரா நிர்வாகத்தில் அந்த மதத்தைச் சாராதவர்கள் இடம்பெற முடியாது. வக்ஃபு என்பது முஸ்லிம் தனவந்தர்கள், முன்னோர்கள் கொடுத்த நன்கொடை. அதில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம்பெறலாம் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாரபட்சமானது. முஸ்லிம்கள் வக்ஃபு கொடுக்கலாம்.
யார் முஸ்லிம்?
5 ஆண்டுகள் இஸ்லாத்தைக் கடைப்பிடித்தவர்கள் வக்பில் இடம்பெறலாம் என்று திருத்த சட்டம் சொல்கிறது. அதை எதிர்த்துதான் வழக்கு தொடர்ந்துள்ளோம். யார் முஸ்லிம் என்பதை வரையறை செய்யும் சட்டத்தை மாநில அரசுகள் இயற்றும் வரை இதை அனுமதிக்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் சொல்கிறார்கள். முஸ்லிம்கள் யார் என்பதை வரையறை செய்யும் பொறுப்பை மாநில அரசுக்கு உரிமை வழங்கியிருப்பது அபத்தமானது.
வக்ஃபு திருத்த சட்டம்
பல்வேறு மாநிலங்களில் பா.ஜ. உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சிகள் அவர்களுக்கு விரும்பப்படக்கூடியவர்களை முஸ்லிம்கள் என்று வகைப்படுத்தப்பட்டு அவர்கள் மட்டுமே வக்ஃபு செய்யும் நிலையை உருவாக்கும். இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளோம். நவம்பர் மாதம் இறுதி விசாரணை நடக்கும்போது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கின்றோம்.
தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட 400 கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29ஏ பிரிவு, அரசியல் அமைப்புச் சட்டம் 324 பிரிவைச் சொல்லுகிறார்கள். 29ஏ-யில் எங்கேயும் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியைப் பதிவை நீக்கலாம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. 2000-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறுதலாக, மோசடித்தனமாக தவறான தகவல்களைக் கொடுத்து ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டால் அந்தப் பதிவை ரத்து செய்யலாம் என்று கூறியுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சி
தேர்தல் ஆணையத்திற்குப் பதிவு செய்யப்பட்ட கட்சிகளை ரத்து செய்யக்கூடிய உரிமையைக் கொடுக்கவில்லை. ஜனநாயக உரிமையைப் பறிக்கக்கூடியதாக உள்ளது. ம.ம.க. 2009 முதல் பதிவு செய்யப்பட்டு பல்வேறு தேர்தல்களில் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். பேரூராட்சி, ஊராட்சி, மாநகராட்சித் தலைவர் உறுப்பினர்களாகப் பலர் இருந்துள்ளனர். தேர்தல் ஆணையம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் உள்ள அபத்தங்களைத் தேர்தல் ஆணையம் செய்யும் முறைகேடுகளை அம்பலப்படுத்துகிறார்.
விஜய் கூட்டம்
அதனைத் திசைதிருப்புவதற்காகப் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. 30 நாள் மேல்முறையீடு செய்யக் காலஅவகாசம் கொடுத்துள்ளது. நிச்சயம் மேல்முறையீடு செய்து வெல்வோம். த.வெ.க. தலைவர் விஜய்யைக் காண்பதற்கு அதிக அளவில் கூட்டம் வந்திருக்கிறது. கடந்த காலங்களில் நடிகர் வடிவேலுக்கு அதிக கூட்டம் வந்தது அவரால் வெற்றிபெற முடியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications