கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா
சென்னை: தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாட்டில் ஒன்றிய பாஜக அரசின் கீழ் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2013-2014 கல்வி ஆண்டிலிருந்து இப்பள்ளிகளில் தமிழ்மொழி விருப்பப் பாடமாக பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் தாய்மொழியான தமிழ்மொழியில் கற்பிக்க இயலாது என்றும் சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
செம்மொழியான தமிழ் மொழியை மேடைதோறும் புகழ்ந்து பேசி வரும் பிரதமர் மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் இல்லை என்று ஆணை பிறப்பித்து இருப்பது மோசடியாகும். இது தமிழுக்கும் தமிழர்களின் கல்வி உரிமைக்கும் செய்யும் பச்சைத் துரோகம், படுபாதகச் செயல்.
மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு மட்டுமே அக்கறைக் காட்டுகிறது.
ஒன்றிய அரசால் தமிழ்நாட்டில் நடத்தப்படுகிற பள்ளிக்கு இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை நடத்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசு தான் ஊதியம் வழங்குகிறது. இந்நிலையில் தமிழ் ஆசிரியர்களை நியமித்து கற்பிக்க மறுப்பது என்பது மிகப்பெரிய கயமைத்தனம்.
தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமித்து தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications