மார்ச் 28,29 நாடு தழுவிய வேலைநிறுத்தம்! மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவு! ஜவாஹிருல்லா அறிவிப்பு!
சென்னை: மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவு நல்குவதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
மக்களின் மீது அக்கறை இருந்திருந்தால், இந்நேரம் ஒன்றிய அரசு தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு கண்டிருக்கும் என்றும் ஆனால் அதுபோல் எதுவும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பொதுத்துறை நிறுவனங்கள்
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பைத் திரும்பப் பெறவேண்டும்; பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்; முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கக்கூடாது; விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உரிமைகளைத் தட்டிப் பறிக்கக் கூடாது; உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்ச் 28, 29 தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் முன்னின்று நடத்தும் நாடு தழுவிய போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவை அளிக்கிறது.

உடனடி தீர்வு
சுமார் 25 கோடி பேர் பங்கேற்பர் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்து சேவைகள், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் மீது அக்கறைக் கொண்டுள்ள அரசாக இருந்தால் ஒன்றிய அரசு தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வு கண்டிருக்க வேண்டும்.

மமக ஆதரவு
ஆனால் போராட்டத்தை நசுக்க பல்வேறு வகையிலான முயற்சியை ஒன்றிய அரசு செய்து வருவதாகத் தெரிகிறது. கோரிக்கைகள் மிகவும் நியாயமானதாக இருப்பதால் பொதுமக்களின் ஆதரவும் பரவலாக இப்போராட்டத்திற்கு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இப்போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் பங்குகொள்வர் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவும் ஆதரவு
இதனிடையே மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதேவேளையில் அரசு ஊழியர்கள் மார்ச் 28 மற்றும் 29-ம் தேதிகளில் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications