கணினி சர்வர் ரொம்ப மோசம்! சுத்திக்கிட்டே இருந்தால் எப்படி பயிர் காப்பீடு செய்ய முடியும்? -ஜவாஹிருல்லா
சென்னை: பயிர் காப்பீடு செய்வதற்கான கணினி சர்வர் மிகவும் சுணக்கமாக இருப்பதால் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இனி வரும் காலங்களில் காப்பீடு விஷயத்தில் அரசு உரியக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

சம்பா, தாளடி பருவம்: ''சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காவிரியில் நீர் வரத்து இல்லாததாலும், பருவமழை பொழிவு போதுமான அளவுக்கு இல்லாத காரணத்தாலும் பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளைத் தாமதமாகத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ''
கணினி சர்வர் சுணக்கம்: ''மேலும் தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும், பெரும்பாலான இணையச் சேவை மையங்களில் காப்பீடு செய்வதற்கான கணினி சர்வர் சுணக்கமாக வேலை செய்வதாலும் அரசு அறிவித்துள்ள நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்பது குறுகிய கால அவகாசமாக உள்ளது.
எனவே விவசாயிகள் நலன் கருதிப் பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 25 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.''
காப்பீடு விஷயத்தில் கவனம்: ''மேலும், கடந்த சில ஆண்டுகளாக சம்பா பருவத்தில் காப்பீடு செய்த விவசாய நிலங்களுக்குப் பாதிப்பின் அடிப்படையில் முறையாகக் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்கிற குறை விவசாயிகளிடையே இருப்பதைக் காண முடிகிறது. இது போன்ற குறைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க, காப்பீடு விஷயத்தில் அரசு உரியக் கவனம் செலுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications