புதிய நாடாளுமன்றத்தில் சீன உபகரணங்கள்! மோடி வாய்ச் சொல்லில் மட்டுமே வீரர்! ஜவாஹிருல்லா சாடல்!
சென்னை: புதிய நாடாளுமன்றத்தில் உள்ள பல உபகரணங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டதாகவும் மோடி வாய்ச் சொல்லில் மட்டுமே வீரர் எனவும் மமக தலைவர் ஜவாஹிருல்லா சாடியுள்ளார்.
பிரதமர் மோடி அடிக்கடி போதிக்கும் மேக் இன் இந்தியா செயல்திட்டமானது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ள ஜவாஹிருல்லா, பிரதமர் மோடி பேசுவதில் மட்டுமே கில்லாடி என கிண்டலும் செய்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் ஜவாஹிருல்லா தனது டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புதிய நாடாளுமன்றத்தில் 5,000 விளக்குகள் பொருத்தியதாக கூறும் பீகாரை சேர்ந்த குஞ்சேஷ் குமார் என்பவர், புதிய நாடாளுமன்றத்தில் உள்ள பல உபகரணங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், விளக்குகள் பொருத்திய அந்த நபர், மேக் இன் இந்தியாவை போதிக்கும் அளவுக்கு அதை நடைமுறைப்படுத்துவதில்லை எனவும் கூறியிருக்கிறார். ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் கூறியிருந்ததை சுட்டிக்காட்டி ஜவாஹிருல்லா பதிவு வெளியிட்டுள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வரும் நாடாளுமன்றத்துக்கு மிக அருகிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ. 850 கோடிக்கு மேலாக செலவிட்டு கட்டப்பட்டு இன்று திறப்பு விழாவும் கண்டுள்ளது. இதில் நாடு முழுவதும் 19 எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த நிலையில் 25 கட்சிகள் மட்டும் பங்கேற்றன.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நடைபெற்ற மே 28ஆம் தேதியான இன்று தான் சாவர்க்கர் பிறந்தநாள் என்பது கூடுதல் தகவலாகும். குடியரசு தலைவருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளை உதாசீனம் செய்துவிட்டதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications