காலிப்பணியிடங்களை உடனே நிரப்பணும்! அதுக்கு இது தான் வழி! அரசுக்கு ஜவாஹிருல்லா கொடுக்கும் ஐடியா!
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் மூலம் குறைந்தபட்சம் 15000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
தேர்வாளர்கள் அதிகமாகியுள்ள காரணத்தால் 10000 பணியிடங்கள் என்பது போதுமானதாக இல்லை என அவர் காரணமும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியாளர்களைத் தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி எனும் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்வது வழக்கமாக இருந்துவருகிறது.
மேலும், சட்டமன்ற பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி மூலமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஆண்டு சுமார் 10000 பணியிடங்களை நிரப்பத் தேர்வாணையம் அறிவிப்பு செய்துள்ளது. ஆனால் கொரோனா நோய்த்தொற்று காரணத்தால் தனியார்த் துறையில் வேலை இழப்பை சந்தித்தோர், புதிதாக பட்டம் பெற்ற மாணவர்கள் என தேர்வாளர்கள் அதிகமாகியுள்ள காரணத்தால் 10000 பணியிடங்கள் என்பது போதுமானதாக இல்லை.
தேர்வாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் 15000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும், அதேபோல் ஆவின், போக்குவரத்து, மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களைத் தேர்வாணையம் நிரப்ப உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications