உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்! இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல! ஜவாஹிருல்லா கண்டனம்!
சென்னை: உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த அம்மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு தொடர்ச்சியாக வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்வது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

உத்தரகாண்ட் அரசு
உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜக அரசின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக அறிவித்திருக்கிறார். தற்போது நடைமுறையில் திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை, தத்தெடுத்தல், ஜீவனாம்சம் உள்ளிட்ட சிவில் விவகாரங்கள் பல்வேறு மதத்தை பின்பற்றுவோருக்குத் தனிச் சட்டங்களாக உள்ளன.

பொது சிவில் சட்டம்
பல்வேறு சமயங்களைப் பின்பற்றுகிற மக்கள், பழங்குடிகள் வாழ்கிற இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த நாட்டில் தங்களுடைய சமய, கலாச்சார நம்பிக்கைகளைப் பாதுகாத்துக்கொள்கிற, பின்பற்றிக்கொள்கிற உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.
பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்துத்துவ சட்டத்தை அனைவர் மீதும் திணிக்கும் சதி சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் தனி பண்பாடுகளையும் சிதைக்கும் முயற்சியாகும்.

எதிர்காலத்துக்கு நல்லதல்ல
உத்தரகாண்டு அரசின் இம்முயற்சிக்கு இந்திய நாட்டின் பன்முகத்தன்மை அக்கறைகொண்ட அனைவரும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டும். நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அக்கறை காட்டாமல் பாஜக அரசு தொடர்ச்சியாக வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்வது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உத்தராகாண்ட் அரசின் பொது சிவில் சட்ட திணிப்பிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

எதிர்ப்புகள்
பொது சிவில் சட்டத்திற்கு ஆரம்பம் முதலே சிறுபான்மையினர் நல அமைப்புகளும், கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் தனி உரிமை பறிபோகும் என்பது அவர்களின் கூற்றாகும்.












Click it and Unblock the Notifications