ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலை இன்னும் திறக்காதது ஏன்? - ஜவாஹிருல்லா கண்டனம்!
ராஜ் பவன் வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் திறக்கப்படாதது பற்றி ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் பூட்டப்பட்டு, தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவது கண்டனத்திற்குரியது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமுமுக மற்றும் மமக தலைவரான எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல் வாசல் அருகே பல ஆண்டுகளாக ஒரு பள்ளிவாசல் இயங்கிவந்தது. பயணிகளுக்கும், சுற்றுப்புறத்தில் பல்வேறு பணிகளில் இருப்போர்க்கும் தொழுகையை நிறைவேற்ற இந்தப் பள்ளிவாசல் பெரும் உதவியாக இருந்தது.
ஐவேளைத் தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை, ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைகள் யாவும் இப்பள்ளிவாசலில் மிகவும் அமைதியாக நடந்துவந்தன. இந்தப் பள்ளிவாசலாலோ, பள்ளிவாசலுக்கு வருபவர்களாலோ எவ்விதத் தொந்தரவும் பிரச்சனையும் இதுவரை ஏற்பட்டதில்லை.
தொழுகைக்கு வருபவர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் வாகன விவரங்களை நுழைவாயிலில் காவல் அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டே தொழுது வந்தனர். கொரோனாவில் பூட்டப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்ட பிறகும் ஆளுநர் மாளிகை வளாகப் பள்ளிவாசல் மட்டும் தொடர்ந்து பூட்டப்பட்டு தொழுகைக்கு அனுமதியும் மறுக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது.
இதில் உள்நோக்கம் உள்ளதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. இதுகுறித்து ஆளுநர் உரிய கவனமெடுத்து, பல ஆண்டுகளாக அமைதியாகத் தொழுகை நடந்துவந்த பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற ஆவன செய்ய வேண்டுகிறோம்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications