கல்பாக்கத்தில் ஈனுலை! தமிழ்நாடு குப்பைத் தொட்டியா? தமிழர்கள் சோதனை எலிகளா? ஜவாஹிருல்லா ஆவேசம்!
சென்னை: பாஜக அரசு தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாகவும், தமிழர்களைச் சோதனை எலிகளாகவும் கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆவேசம் காட்டியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது;
''நாளை கல்பாக்கம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு கடந்த 20ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான(attaining criticality) எரிபொருள் நிரப்பும் பணிகளைத் தொடங்கி வைப்பதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.''

''சில ஊடகங்களில் மட்டும் வெளியான இச்செய்தி உண்மையாக இருப்பின் இத்திட்டம் தமிழ்நாட்டிற்கு மிகவும் ஆபத்தானதாகும். கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலை இந்தியாவில் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.''
''அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிகப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதை விட்டுவிட்டன.''
''இந்த வகை உலைகளில் குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அந்த உலை மூடப்பட்டது.பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர் பீனிக்ஸ் ஈனுலையும் அதிக பொருளாதாரச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது.''
''இந்தத் தொழில்நுட்பமானது உலக நாடுகள் பலவும் பயன்படுத்திக் கைகூடாத காரணத்தால் கைவிடப்பட்ட தொழில்நுட்பமாகும். இதன் காரணமாக கல்பாக்கத்தில் இத்திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில் இப்போது 2024 டிசம்பருக்குள் பயன்பாட்டிற்குவரும் எனக் கூறப்பட்டுள்ளது.''
''தாமதமான காலத்தில் இத்திட்டத்திற்கான செலவு திட்டமிடப்பட்டதை விட இரண்டுமடங்கு அதிகரித்து ரூ. 3490 கோடியாக இருந்த செலவு மார்ச் 2023 கணக்கின்படி ரூ. 7700 கோடியாக உயர்ந்துள்ளதாக WNISR 2023 அறிக்கை தெரிவிக்கிறது. 2024 ஜனவரி 2 அன்று தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் கல்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள DFRP (Demonstration Fast Reactor Fuel Reprocessing Plant) எனும்"மாதிரி அதிவேக ஈனுலை எரிசக்தி மறுசுழற்சி மையம்" ஒன்றைத் திறந்து வைத்தார்.''
''இதுமட்டுமின்றி ஏற்கெனவே கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் Nuclear Installation Local Authority (NILA)யின் அடிப்படையில் நிலம் வாங்க, விற்க வரைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் எல்லைப் பரப்பும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவது சுற்றுவட்டார மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.''
''தமிழ்நாட்டின் நலனுக்கு எவ்விதப் பங்களிப்பும் தராத உலக நாடுகள் அனைத்தும் கைவிட்ட ஓர் ஆபத்தான தொழில்நுட்பத்தை கல்பாக்கத்தில் தொடங்கும் மோடி அரசின் சூழ்ச்சியைத் தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அணுவுலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டைக் குப்பைத் தொட்டியாகவும், தமிழர்களைச் சோதனை எலிகளாகவும் கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.''
''தமிழ்நாடு இயற்கைப் பேரிடர்களில் சிக்கி கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் நிவாரணமாக ஒரு ரூபாய் கூட வழங்காத பா.ஜ.க. அரசு தொடர்ந்து நாசகாரத் திட்டங்களைத் தமிழ்நாட்டில் அமைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த நாசகரத் திட்டத்தைக் கைவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications