நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் 0! தோல்வியை ஒப்புக் கொண்ட மத்திய அரசு! -ஜவாஹிருல்லா
சென்னை: முதுநிலை மருத்துவக் கல்விக்கு நீட் மதிப்பெண் 0 இருந்தாலே போதுமானது என்ற அறிவிப்பின் மூலம், மத்திய அரசு தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், இதோடு நின்றுவிடாமல் உடனடியாக நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு வருமாறு;

நீட் தகுதித் தேர்வின் மூலம் தகுதியான மாணவர்களை மருத்துவக் கல்விக்கு தேர்வு செய்து சிறந்த மருத்துவராக்குவது தான் ஒன்றிய அரசின் நோக்கம் என்று பாஜகவினர் பரப்புரை செய்து வந்த நிலையில், முதுநிலை மருத்துவக் கல்விக்கு நீட் மதிப்பெண் 0 இருந்தாலே போதுமானது என மருத்துவக் கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
அநீதியாகவும், பாராபட்சமாகவும் இளநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக நீட் தேர்வை நடத்தி, 20க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரைப் பறித்த நீட் இன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளின் காலியாக உள்ள முதுநிலை இடங்களை நிரப்ப வேண்டிய காரணத்தால் 0 மதிப்பெண்ணை பெறுவதையே தகுதியாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு எழுதி 0 மதிப்பெண் பெற்றிருந்தால் கூட படிப்பில் சேர்த்து கொள்ளப்படுவர் என்று கூறியிருப்பது மிகப்பெரிய நகைமுரண்
நீட் தேர்வு தேவையற்றது, தரமான மருத்துவர்களை உருவாக்க நீட் தேவையில்லை, நீட் தேர்விற்கான பயிற்சி என்ற பெயரில் தனியார் நிறுவனங்களின் நலனைக் காக்கவே நீட் தேர்வு, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்ப்பதே நீட் என தமிழ்நாட்டில் சமூக நீதியில் அக்கரையுள்ள கட்சிகள் முன்வைத்த வாதங்கள் சரியானவை என்பதற்கு ஓப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றது முதுநிலை மருத்துவக் கல்வியில் சேர 0 மதிப்பெண் எடுத்தால் போதுமானது என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு.
தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications