நீங்களும் வேண்டாம்! உங்க விருந்தும் வேண்டாம்! ஆளுநர் ரவியின் அழைப்பை புறக்கணித்த ஜவாஹிருல்லா!
சென்னை: தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கும் என அக்ககட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

19 மசோதா
தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகத் தொடர்ச்சியாகத் தமிழக ஆளுநர் செயல்பட்டுவருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கிறார். மக்கள் பிரதிநிதிகளாகச் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட்டிற்கு எதிரான தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பினார்.

அரசின் கொள்கை
மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட்டிற்கு எதிரான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த மசோதாவின் நிலை இதுவரை என்னவென்று தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் அங்குச்சென்று தமிழக அரசின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விரோதமாகப் பேசிவருகிறார்.

தேநீர் விருந்து
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பில்உள்ள மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் மேலும் ஒருஆண்டுக்கு எதேச்சதிகாரமாகப் பதவி நீட்டிப்பு ஆளுநரால் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று தொடர்ந்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்கும் என முடிவு செய்துள்ளது.
Recommended Video

4-வது கட்சி
ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் 4-வது அரசியல் கட்சியாக மனிதநேய மக்கள் கட்சியும் புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications