மத்திய அரசின் போக்கு மதச்சார்பற்ற நாட்டுக்கு அழகல்ல... ஜவாஹிருல்லா கருத்து
சென்னை: உயர்கல்வியில் பகவத்கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பது உள்ளிட்ட மத்திய அரசின் பல நடவடிக்கைகள் மதச்சார்பற்ற நாட்டுக்கு அழகல்ல என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறினார். மேலும், தமிழகத்தின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசுக்கு அதிமுக அரசு தொடர்ந்து துணை போவதால் இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் அக்கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணியை மனித நேய மக்கள் கட்சி தொடரும் என்றும், நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தங்கள் ஆதரவு திமுகவுக்கே என்றும் ஜவாஹிருல்லா கூறினார். 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவித்திருப்பது கல்வியை சீர்குலைக்கும் செயல் என விமர்சித்தார்.
கும்பல் வன்முறை தடுக்கக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய ஒரே காரணத்துக்காக 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்திருப்பது, உலகளவில் இந்தியாவுக்கு பெரிய அவமானத்தை தேடி தந்துள்ளதாக கூறினார். ஜனநாயக நாடான இந்தியாவில் இது போன்ற நடவடிக்கைகள் மிகுந்த கவலைக்குரியது என தெரிவித்தார்.
அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், நாடு சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக நடை போடுவதாகவும் கவலை தெரிவித்தார் ஜவாஹிருல்லா. மணிரத்னம், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications