தன்னலமற்ற அரசியல்வாதி நல்லகண்ணு! தகைசால் விருதுக்கு தேர்வு செய்த தமிழக அரசுக்கு நன்றி -ஜவாஹிருல்லா
சென்னை: தன்னலமற்ற அரசியல்வாதியாக தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் நல்லகண்ணு பெரும் பங்களிப்பை அளித்து வருவதாகவும் அவரை 'தகைசால் விருது'க்கு தேர்வு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் நலன் வளர்ச்சிக்காக பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் ‛தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இந்த ஆண்டு பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான திரு நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட துவங்கினார். விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்துள்ளார். ஏழை எளிய மக்களுக்காக குரல்கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து 99வது வயதிலும் பாடுபட்டு வருகிறவர் தோழர் நல்லக்கண்ணு.
மேலும் தன்னலமற்ற அரசியல்வாதியாக தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்து வரும் ஐயா அவர்களுக்கு விடுதலையின் பவள விழா கொண்டாடப்படும் வேளையில் தகைசால் தமிழர் விருது தமிழக அரசினால் வழங்கப்படுவது பொருத்தமான ஒன்று.
ஜயா நல்லக்கண்ணு அவர்களுக்கு விருது வழங்கியுள்ள தமிழக அரசுக்கும் முதல்வர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications