இனி மெரினா கடற்கரை.. பேனா கடற்கரையாகிவிடும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதங்கம்
சென்னை: பேனா சின்னம் வைத்தால் இனி மெரினா கடற்கரை, பேனா கடற்கரை என்றாகிவிடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்தின், திருவிக நகர் பகுதி கழகத்தின் சார்பில், சென்னை ஓட்டேரியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, ரோஸ் மில்க், கிர்னி பழம், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் முகத்துவாரங்களில்தான் அதிகமான மீன் உற்பத்தி இருக்கும். அந்த முகத்துவராத்தில் ஒட்டியிருக்கின்ற 10 அல்லது 15 கிலோ மீட்டருக்கு மீன் வளம் பெருகும். இந்த இடத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படும்போது கண்டிப்பாக குஞ்சு பொறிக்கும் வகையில் நிச்சயமாக இருக்காது.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் போய்விடும் என்று அவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கும் நிலையிலே, அது மட்டுமல்லாமல் மெரினா கடற்கரை என்றாலே அது உலக பிரசித்தி பெற்றது. எங்கிருந்து வந்தாலும் அது இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் அடையாள சின்னமாக பார்க்கப்படுகிறது.
உலகிலேயே மிக நீளமான கடற்கரையான இந்த மெரினாவுக்கு இனிதென் மாவட்டத்திலிருந்து அல்லது இந்தியாவின் எந்த பகுதியிலிருந்து வந்தாலும் பேனா கடற்கரைக்கு சென்றோம் என்பார்கள். மெரினா என்ற பெயருக்கு பதில் பேனா கடற்கரை என்று வந்துவிடும். அதுவும் அது எழுதாத பேனா. அடையாளமே போய்விடும். மெரினாவிற்கே அடையாளம் என்பது கட்டுமரங்கள், வலைகள், மீன் பிடிக்க செல்லும் அழகு, வலையை உலர்த்துவது, மீன் விற்பனை செய்வது போன்ற அழகின் முக்கியத்துவம் வாய்ந்த இடம்.
இதனை எல்லாம் கருதாமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது தவறு. எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பேனாவிற்கு கடலில் இடம் இருக்கிறது. ஆனால் பாரம்பரியமாக கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அங்கு மீன் விற்பனை செய்வதற்கு உரிமை இல்லை. எனவே மீனவர்களின் வாழ்க்கையோடு விளையாடக் கூடாது. மத்திய அரசை பொறுத்தவரையில் பேனா சின்னத்திற்கு அனுமதி கொடுத்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மத்திய சுற்றுசூழல் துறைக்கு அதிமுக சார்பில் நானும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தோம். திருநெல்வேலி கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கை வெளிப்படுத்தன்மையுடனும் நேர்மையுடனும் விசாரிக்க வேண்டும். இந்த கொலையில் யார் சம்பந்தப்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை இருந்து வருகிறது.இதையெல்லாம் மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications