வந்தாரு.. போனாரு.. ரிப்பீட்டு போல் டிவியில் ஸ்டாலின்தான் வருகிறார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் தாக்கு!
சென்னை: நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நடைபெறும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்கலாமா என்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Recommended Video
ராயபுரம் , திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவினர் எப்போதும் குறுக்கு வழியில் சாதிக்கவே நினைப்பார்கள். கவுன்சிலர்கள் குறைவாக வென்றால் பணம் கொடுத்து , ஆள் கடத்தி பதவிகளை கைப்பற்ற முயற்சிப்பர்.

காங்கிரஸ்- திமுக கூட்டணி
நீட்டை 2010 ல் திமுக- காங். கூட்டணியில் காந்திராஜன்தான் அறிமுகப்படுத்தினார். தமிழகத்திற்கு நீட் வேண்டும் என்பது பாஜக நிலைப்பாடு , நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என்பது எப்போதும் அதிமுகவின் நிலைப்பாடு. பாஜக அதிமுகவுடன் தோழமையில் இருந்தார்கள். இன்று இல்லை , நாளை இருப்பார்களா என்பதை கட்சிதான் முடிவு செய்யும்.

நீதிமன்ற வழக்கு
அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் , கனிமொழி , உதயநிதி நீட் விலக்கு பெறும் வித்தை , சூட்சமம் தெரியும். ஒரே கையெழுத்தில் நீட்டை நிறுத்துவோம் என்று கூறி மாணவர்களுக்கு நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். ஏகே ராஜன் குழு அறிக்கையை வைத்து ஏன் திமுக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து சட்டப் போராட்டம் நடத்தவில்லை?

அனைத்து கட்சி கூட்டம்
திமுக அறிவித்துள்ளது அனைத்து கட்சி கூட்டமில்லை , கூட்டணி கட்சி கூட்டம்தான். பாஜகவின் சித்தாந்தம் , கொள்கை அதிமுகவிருந்து வேறானது , தேர்தல் கூட்டணி வேறு , கொள்கை வேறு. நீட்டிலிருந்து நிரந்தர விலக்கு பெற வேண்டும். அதுவரை நீட் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும். சட்ட ரீதியான போராட்டம் நடத்துவது என மூன்று முடிவுகளில் அதிமுக உறுதியாக உள்ளது.

17 ஆண்டுகளில்
நீட் விலக்கு தீர்மானத்திற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அதிமுக பங்கேற்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். திமுக , மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த 17 ஆண்டுகளில் கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஏன் முயற்சிக்கவில்லை? சமூக நீதிக்கு ஆபத்து வந்தபோது பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து பேசி 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாத்தார் ஜெயலலிதா , வீரமணி சமூக நீதி காத்த வீராங்கனை என பட்டம் கொடுத்தார் என்றார்.

நிவாரணம், நலத்திட்டங்கள்
அது போல் கட்சியினரிடையே மேடையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் அதிமுக வேட்பாளர்கள் சுறுசுறுப்பாக , வீடுதோறும் சென்று ஜெயலலிதா மூலம் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் , பள்ளி குழுந்தைகளுக்கான விலையில்லா உபகரணங்கள் , மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் , இயற்கை பேரிடரின் போதான நிவாரணப் பணிகள் , மகளிர் நீதிமன்றம் போன்றவற்றை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.

தலைகுனிவு நிலை
உள்ளாட்சியில் மகளிருக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு போன்ற அதிமுக திட்டங்களை மோசடி செய்து திமுக தனது திட்டமாக கூறி வருகிறது. தொலைக்காட்சியை திறந்தாலே ஸ்டாலின்தான் வருகிறார். வந்தாரு ...போனாரு ..ரிப்பீட்டு என்பதுபோல ஸ்டாலின் படம்தான் மீண்டும் மீண்டும் வருகிறது. 2006 ல் திமுக காலத்தில் உள்ளாட்சி தேர்தலில் 87 வார்டில் கலவரம் நடந்தது , நீதிபதி வாக்கையே யாரோ செலுத்தி விட்டனர். எனவே அங்கெல்லாம் மறு தேர்தல் நடந்தது. அதிமுகவினர் விலை போனால் அது மன்னிக்க முடியாத குற்றம். அவ்வாறு செய்து மக்களிடம் தலைகுனிவு நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications