ராஜேந்திர பாலாஜி என்ன தேசதுரோகியா.. எதுக்கு இத்தனை தனிப்படைகள்?.. ஜெயக்குமார் சுளீர்!
சென்னை: ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டப்பட்டவர் மட்டுமே. குற்றவாளி இல்லை. திமுக அரசு ராஜேந்திர பாலாஜியை தேசதுரோகி போல் தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி வீசிய சுனாமியால் தமிழகத்தில் மட்டும் சுமார் 10000 க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை நீத்தனர்.
சுனாமியால் இறந்தவர்களுக்கு 17 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை காசிமேட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

சுனாமி பேரலை
பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், 2004-ஆம் ஆண்டு வீசிய சுனாமி பேரலையால் ஏற்பட்ட சேதம் என்றும் மறக்க முடியாதது. சுனாமி ஏற்பட்ட காலத்தில் அப்போதைய அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது. திமுக அரசு மீனவர்களை கண்டுகொள்வதே இல்லை. கடந்த மாதம் வெள்ளத்தின்போது ஏற்பட்ட சேதங்களை கணக்கிட குழு மட்டுமே அமைத்தார்களே தவிர இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை. இது ஒரு குழு அரசு என்றார்.

தலைமறைவு
முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதுவரை தலைமறைவாக இருப்பது குறித்த கேள்விக்கு, ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. அவர் ஒரு குற்றவாளி இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரை ஒரு தேசத் துரோகி போல தனிப்படைகள் அமைத்து எதற்கு தேடுகிறார்கள் என்று தான் புரியவில்லை. மேலும் ராஜேந்திர பாலாஜி அதிமுகவை சேர்ந்தவர் என்பதாலேயே திமுக பழிவாங்குகிறது.

அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சியின் போது மட்டுமே சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்கு சந்தி சிரிக்கிறது. அதிமுக காலத்தில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்த தமிழக காவல்துறை தற்போது மேய்ப்பவர்கள் சரியில்லாத காரணத்தினால் அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றார்.

காலணி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் காலணியை காட்டியது குறித்த கேள்விக்கு, திமுக ஆட்சியில் எல்லாம் ஒழுங்காக நடந்தால், எல்லோரும் ஒழுங்காக இருப்பார்கள். ஒழுங்காக நடக்க வில்லை என்றால் இதுபோன்று காலணிகள்தான் வந்து பாயும். தமிழ் வளர்ச்சிக்கு திமுக எதுவும் செய்யவில்லை. நாங்கள் நடத்திய உலக மாநாடு தான் தமிழ் வளர்ச்சி மாநாடு. திமுக நடத்திய செம்மொழி மாநாடு அவர்களின் குடும்ப மாநாடு என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications