விரைவில் டெல்லி செல்லும் ஆளுநர்.. தமிழகத்தில் திமுக ஆட்சி கவிழும்.. கொளுத்தி போடும் அதிமுக மாஜி
சென்னை: இன்னும் சில நாட்களில் டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழகத்திற்கு நல்ல செய்தியோடு வருவார் என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பூடகமாக சில விஷயங்களை கூறியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது: இன்றைக்கு கிளைமேட்டும் நன்றாக இருக்கிறது. அதேபோல அரசியல் கிளைமேட்டும் மிகவும் நன்றாக உள்ளது.

ஆளுநர் இன்னும் சில நாட்களில் டெல்லி செல்வதாக தகவல் உள்ளது. நல்ல செய்தி வரும். திமுக அரசு டிஸ்மிஸ் என்ற செய்தி வரும். தமிழகத்திற்கே அன்றைக்குத்தான் தீபாவளி. திமுக அரசு டிஸ்மிஸ் ஆனால் அன்றைக்குத்தான் தமிழகத்திற்குப் பெரிய தீபாவளி. இவர்கள் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில் எத்தனை கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் பலாத்காரம், கட்ட பஞ்சாயத்து, உள்ளாட்சி பொறுப்பில் இருப்பவர்கள் குறித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
38 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று வடையும், போண்டாவையும், சுண்டலையும் சாப்பிட்டு வருகிறார்களே தவிர எந்த பலனும் இல்லை. இந்த இரண்டு வருடத்தில் தமிழகம் என்ன பலனைக் கண்டது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா, இல்லை. பொருளாதார வல்லூனர் குழு போட்டு இரண்டு வருடம் ஆகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும்,பாலும் ஓடும் என்றார்கள். ஆனால் சாக்கடை தண்ணீர்தான் ஓடுகிறது. ஒரு நாள் மழையில் கிட்டதட்ட 160 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் பொய் சொல்லிவிட்டு எங்கும் தண்ணீர் நிற்கவில்லை என்கிறார்கள்.
திமுக அரசு ஊழல் செய்ததாக கூறப்படும் 30 கோடி ரூபாய் இருந்தால் எத்தனையோ மாவட்டங்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யலாம். ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தருவார்கள். அதன்பிறகு நிறுத்திவிடுவார்கள். இன்றைக்கு அரசு ஊழியர்கள் முதல் ஆசிரியர்கள் வரை இறங்கிப் போராடுகிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றவில்லை. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் வாய் கூசாமல் இன்றைக்குப் பேசுகிறார்கள்.
மகத்தான திட்டங்களை அம்மா கொண்டு வந்தார்கள். தாலிக்குத் தங்கம் திட்டம் எவ்வளவு அருமையான திட்டம். இருசக்கர வாகனம் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டத்தை மூடுவிழா செய்துவிட்டார்கள். நாம் கொண்டு வந்த திட்டங்களுக்கு லேபிள் ஒட்டுகின்ற வேலையைத்தான் இந்த ஆட்சி செய்து வருகிறதே தவிர எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இன்றைக்கு நகர்ப்புற வாழ்வு மையம் என்று கொண்டு வந்துள்ளார்கள். முன்னாள் முதல்வர் எடப்பாடி தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கினார். இதுதான் மக்கள் நல அரசு.
மக்களுக்காகக் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் இந்த மக்கள் விரோத அரசு முடக்கிவருகிறது. இன்றைக்கு செந்தில் பாலாஜியை எடுத்துக் கொள்ளுங்கள். திமுக அமைச்சர்களைப் பொறுத்தவரை மக்களைப் பற்றி சிந்திப்பது கிடையாது. 30,000 கோடி ஊழல் நடந்ததாக நிதியமைச்சராக இருந்த பிடிஆர் தெரிவித்தார். இதற்கு முதலமைச்சர் பிடிஆர் பேசியதாக கூறப்படும் ஆடியோ கட் செய்து ஒட்டப்பட்டது என்று தெரிவிக்கிறார். செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் 90 சதவீதத்தினர் உள்ளே போவார்கள். திரைப்படங்களைப் போல திமுகவுக்கு இந்த மாதம் சிறைக்குப் போகும் மாதமாக இருக்கும். அடுத்து பொன்முடி , கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் போகப் போகிறார். செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் அனைவரும் உள்ளே போகக்கூடிய நிலைமை வரும்.
என் மீது பல வழக்குகள் போட்டார்கள்.நாங்கள் பயப்படவில்லை. கைதுக்கு பயப்படாத ஒரே இயக்கம் கழகம் மட்டும்தான். வழக்குக்கு அஞ்சுகின்ற இயக்கம் கழகம் கிடையாது. ஊரை அடித்து கொள்ளை அடித்தவனைப் பிடித்துக் கொடுத்த என் மீது 40 பிரிவுகளில் வழக்கு போட்டார்கள். என்னைக் கைது செய்யும் போது மாத்திரை எடுத்து வருகிறேன் என்று சொல்லும் போது காவல்துறை விடவில்லை. சாப்பிடவேண்டும் என்றேன். அதற்கும் விடவில்லை. உடனே நான் அவர்களுடன் சென்றேன். நாங்கள் என்ன அழுதோமா. சென்னையில் பிறந்த வளர்ந்த எனக்கே சென்னையைச் சுற்றிக் காண்பித்தார்கள்.
தீவிரவாதிகளை அடைக்கும் ஜெயிலில் அடைத்தார்கள். வானமே கூரை என்று நான் படுத்துவிட்டேன். நான் அழவில்லை. ஆனால் இவர்கள் பரம்பரையே அழுவதுபோலத்தான் உள்ளது. ஜெயலலிதா ஒரு போர் முரசு கொட்டுகின்ற வீராங்கனை. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டபோது அனைவரையும் டீ சாப்பிடச் சொல்லி வாருங்கள் போகலாம் என்று சொன்னார்கள். செந்தில் பாலாஜி கைதுக்கு ஏன் ஸ்டாலின் பதறுகிறார்.
செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரையில் பல விஷயங்கள் அவருக்குத் தெரியும். எவ்வளவு, யார் யாருக்கு அளித்தார் என்று தெரியும். எங்குப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று அவருக்குத் தெரியும். அமலாக்கத்துறை இதனை விடப்போவதில்லை. நான் குறிப்பிட்டதுபோல ஊழலுக்காகவே வீட்டிற்குப் போகும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும். திமுகவினர் அனைவரும் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கம்பி எண்ணுகின்ற நிலைமை ஏற்படும். ஊழல் செய்யும் புலிகள் எல்லாம் கோட்டையை விட்டு கம்பி எண்ணும் என்று தலைவர் தெரிவித்தார்.அந்த கம்பி எண்ணுகின்ற நாள் விரைவில் திமுகவுக்கு வந்துவிடும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.












Click it and Unblock the Notifications