கிளம்பிடாருய்யா கிளம்பிட்டார்! அம்மா ஆன்மிக பேரவை! புது அமைப்பு ஆரம்பித்த ஜெயலலிதா பிஏ பூங்குன்றன்!
சென்னை: அம்மா ஆன்மிக பேரவை என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை தொடங்கியுள்ளார் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்.
அம்மா ஆன்மிக பேரவையில் அரசியல் துளியும் இருக்காது என்பதை அறிவித்துள்ள அவர், அந்த அமைப்பின் தலைவராக தாம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா காலமாகும் வரை அவரது உதவியாளராக இருந்த பூங்குன்றன், இப்போது முழுக்க முழுக்க ஆன்மிகப் பாதையில் பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புலவர் சங்கரலிங்கம் மகன்
புலவர் சங்கரலிங்கத்தின் மகனான பூங்குன்றன் ஜெயலலிதாவின் உதவியாளராக பல ஆண்டுகள் போயஸ் கார்டன் இல்லத்தில் கோலோச்சியவர். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை இவரிடம் இருந்து போன் அழைப்பு வருகிறது என்றால், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தொடங்கி அரசுத்துறை உயர் அதிகாரிகள் வரை ஒரு நிமிடம் பதைபதைத்து போய்விடுவார்கள். ஜெயலலிதா என்ன சொல்லியிருப்பாரோ என்பது தான் இந்த பதற்றத்துக்கு காரணம். இதனை உணர்ந்தவராக ''ஒன்னுமில்லை, அம்மா இதைச் சொல்ல சொன்னாங்க'' என கூலாக பேசி எதிர்முனையில் இருப்பவர்களது பிபியை குறைப்பார் பூங்குன்றன்.

நம்பிக்கை தளபதி
ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்திருக்கிறார் என்றால் அவர் மீது ஜெயலலிதா எந்தளவு நன்மதிப்பை வைத்திருந்திருப்பார் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பூங்குன்றனிடம் இருந்த பணிவு, அறிவுக்கூர்மை, சுறுசுறுப்பு, தமிழ் புலமை, ஆகியவைகள் தான் அவரை அதிக ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் உதவியாளராக பயணிக்க வைத்தது. ஜெயலலிதா கண் அசைவை வைத்தே அவர் என்ன நினைக்கிறார் என்பதை யூகித்து அதற்கேற்று செயல்படக் கூடியவர் பூங்குன்றன்.

ஆன்மிகப் பாதை
இப்படி ஆஹா ஓஹோவென ஒரு காலத்தில் இருந்த பூங்குன்றன், இப்போது சீண்டுவதற்கு ஆளில்லாமல் தனித்து விடப்பட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா என யார் பக்கமும் செல்ல விரும்பாத அவர் முழுக்க முழுக்க ஆன்மிகப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். கோவில் கோவிலாக சென்று வழிபடுவது அவ்வப்போது தன்னை சந்திக்க வரும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களை சந்தித்து பேசுவது என காலத்தை கழித்து வந்தவர், இப்போது அம்மா ஆன்மிக பேரவை என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை தொடங்கியிருக்கிறார்.

அரசியல் இல்லை
அம்மா ஆன்மிகப் பேரவையில் அரசியல் இருக்காது என்பதை அறிவித்துள்ள பூங்குன்றன் சங்கரலிங்கம், அதில் உறுப்பினர்கள் சேர்க்கையையும் தீவிரப்படுத்த உள்ளார். இந்தப் பேரவையின் செயல்திட்டங்கள் எதையும் இன்னும் அவர் வெளியிடவில்லை. அதிமுகவில் ஏற்கனவே அதிகாரச்சண்டை உச்சத்தில் இருக்கும் சூழலில், அம்மா ஆன்மிகப் பேரவை ஜெயலலிதா அபிமானிகள் மத்தியில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications