ஜெ. மரணத்தில் மர்மம்... 21ல் ஆஜராக ஓபிஎஸ்க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் - விசாரணைக்கு வருவாரா?
ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் விசாரணை நடத்த உள்ளது. மார்ச் 21ல் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் விசாரணை நடத்த உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக் கோரிய ஓ பன்னீர் செல்வத்தை மார்ச் 21ல் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அமைச்சர்கள், எம்பிக்கள், அப்போலோ டாக்டர் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணைத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. தற்போது ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவர் குழு
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு எய்ம்ஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆலோசனை
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்கள், சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 16ஆம் தேதி ஆலோசனை நடத்தியது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலா தரப்பு மற்றும் அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கினர். முடிவில் அப்போலோ மருத்துவர்கள் 11 பேர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

ஓய்வெடுக்க அறிவுறுத்தல்
அதன்படி, நேற்று நடந்த முதல்நாள் விசாரணையில், அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதில், 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் ஆகிய பிரச்னை இருந்தது என அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவர் பதில்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று நடந்த 2 ஆம் நாள் விசாரணையில், ஜெயலலிதா இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவருக்கு உயிரை காக்கும் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டதா? என்பது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அப்போலோ மருத்துவரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அப்பல்லோ மருத்துவர் மதன்குமார், ஜெயலலிதாவுக்கு 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்பு தான் என்று பதிலளித்தார். மாரடைப்பு ஏற்பட்டபோது ஜெயலலிதாவுக்கு உயிரை காப்பதற்கான அனைத்து சிகிச்சை முறையும் தரப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஓபிஎஸ்க்கு சம்மன்
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜா செந்தூர்பாண்டியன், வரும் 15ம் தேதிக்கு பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை விசாரணைக்காக ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்ப இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து வரும் மார்ச் 21ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் 21ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

8 முறை சம்மன் அனுப்பிய ஆணையம்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சசிகலா தரப்பிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை ஓ பன்னீர் செல்வம் முன்வைத்தார். சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கூறினார். சசிகலா சிறை சென்ற பிறகு, அதிமுக இரு அணிகளும் ஒன்றாக இணைந்த போது, ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும் என்று பழனிச்சாமி தரப்பு உறுதி அளித்தது. அதன் பின்னர், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த ஆணையத்தில் ஆஜராகுமாறு 8 முறை சம்மன் அனுப்பியும் ஒரு முறை கூட ஓ பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை. இந்த நிலையில் ஆணையம் மீண்டும் ஓ பன்னீர் செல்வத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிடிவி தினகரன்
ஆறுமுகசாமி ஆணையம் குறித்து கருத்து கூறியுள்ள டிடிவி தினகரன், அரசியல் காரணங்களுக்காக சசிகலாவை சிக்கவைப்பதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெ. ஜெயலிலதா உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்தார் என்பதுதான் உண்மை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications