ஜெயலலிதா மரணத்தின் காரணம் இதுதான்.. ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம்
சென்னை: ஜெயலலிதா மாரடைப்பு ஏற்பட்டு தான் இறந்தார், என அப்பல்லோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு 75 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக-வில் உள்ள பலரும் கருத்து கூறினர். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆறுமுகசாமி ஆணையம்
2017 செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், பணியாளர்கள், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் என 154 பேரிடம் விசாரணை நடத்தியது இந்த ஆணையம்.

தடை
மருத்துவர்களை விசாரிக்கும் போது மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற முடியாத சூழல் நிலவியது. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குநர் பரிந்துரையின்படி 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடங்கியது.

அப்பல்லோ மருத்துவர்கள்
சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் நேற்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகினர். அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். இரண்டாவது நாளான இன்றும் அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை தொடர்ந்தது. இன்று அப்பல்லோ மருத்துவர்கள் மதன்குமார், ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் ஆஜராகினர்.

மாரடைப்பு
மதன்குமாரிடம் நடைபெற்ற குறுக்குவிசாரணையில், ஜெயலலிதாவுக்கு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டதும் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டோம் என அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications