”ஜெயலலிதாவின் வரி பாக்கியை சரியாக சொன்னால் செலுத்த தயார்”.. உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா தரப்பு பதில்!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித்தொகை எவ்வளவு என்பது குறித்து சரியான தொகையை தெரிவித்தால், அதை செலுத்த தயாராக இருப்பதாக ஜெ. தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறை வரும் ஜன.12-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாக்கியாக வைத்துள்ள ரூ.36.56 கோடி வருமான வரியை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறை கடந்த ஜூலை 23 அன்று நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருமான வரித்துறையின் நோட்டீஸுக்கு தடை உத்தரவு பெற்றார். அதையடுத்து அந்த நோட்டீஸை திரும்பப் பெற்ற வருமான வரித்துறை ரூ. 13.69 கோடியை செலுத்தும்படி புதிதாக நோட்டீஸ் அனுப்பியது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கில் ஜெ.தீபக்கும் இணைந்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நிலுவைத் தொகையில் தனது பங்குத்தொகையை தவணை முறையில் செலுத்தி வருவதாக ஜெ.தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சத்தியகுமார், "ஏற்கெனவே ஜெயலலிதா வருமான வரி பாக்கி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி எனக்கூறிய வருமான வரித்துறை, அதன்பிறகு ரூ.36 கோடி கட்ட வேண்டும் எனக்கூறியது. தற்போது ரூ.13.69 கோடி எனக் கூறுகிறது.
வருமான வரித்துறையின் இந்த கணக்கீடு முற்றிலும் தவறானது என்பது தான் எங்கள் தரப்பு வாதம். நிலுவை வரி தொடர்பாக தெளிவான எந்த விளக்கத்தையும் வருமான வரித்துறை தெரிவிக்கவில்லை. சரியான தொகையை தெரிவித்தால், செலுத்த தயாராக இருக்கிறோம்" என வாதம் வைத்தார்.
ஜெ.தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எல்.சுதர்சனம், "எங்களது பங்களிப்புத் தொகையை தவணை முறையில் செலுத்தி வருகிறோம்" என்றார். வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெ.பிரதாப், "தற்போது வருமான வரி பாக்கியாக ரூ.13.69 கோடி உள்ளது. இதில் தனது பங்குத் தொகையை தீபக் செலுத்தி வருவதால், தீபா செலுத்த மாட்டேன் எனக் கூற முடியாது" எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், யாரும் எந்த சிறப்பு சலுகையும் கோர முடியாது எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, எவ்வளவு வரி பாக்கி செலுத்த வேண்டும் என கணக்கு விவரங்களை சரிபார்த்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, "மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகை எவ்வளவு என்பது குறித்து விளக்கமான பதில் மனுவை வருமான வரித்துறை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜனவரி 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications